ஜனவரி 19
சைக்கிள் பந்தயத்தின் கதை
கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற போட்டிகளுக்கு உலகக் கோப்பை எப்படியோ, அப்படித்தான் சைக்கிள் பந்தயத்தில் ‘டூர் டி பிரான்ஸ்’ விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகச்சிறந்த சைக்கிள் பந்தய வீரர் யார் என்பதை இந்தப் பந்தயம்தான் தீர்மானிக்கிறது. அந்த அளவுக்கு சைக்கிள் பந்தயங்களில் மிக முக்கியமானதாக விளங்கும் ‘டூர் டி பிரான்ஸ்’-ஐ தொடங்கப்போவதாக 1903-ம் ஆண்டு முறைப்படி அறிவித்த நாள் இன்று (ஜனவரி 19).
பிரான்ஸ் நாட்டில் விளையாட்டுத் துறையில், கடந்த நூற்றாண்டில் பிரபலமாக இருந்த 2 பத்திரிகைகளுக்கு இடையில் இருந்த போட்டிதான் இந்த சைக்கிள் போட்டி தொடங்க முக்கிய காரணம். இதில் ‘லீ வெலோ’ என்ற நாளிதழ், 80 ஆயிரம் பிரதிகளை விற்று மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. அதற்கு போட்டியாக இருந்த ‘எல் ஆட்டோ’ பத்திரிகையால் அத்தனை பிரதிகளை எட்ட முடியவில்லை.
இந்த சூழலில் தங்கள் விற்பனையை பெருக்க என்ன செய்யலாம் என்று ‘எல் ஆட்டோ’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது ஆசிரியர் குழுவில் இருந்த ஜியோ லெஃபெர் என்பவர், “நமது பத்திரிகையின் சார்பாக மிக நீண்ட சைக்கிள் போட்டி ஒன்றைத் தொடங்கினால் மக்களிடையே கவனத்தைப் பெறலாம்” என்று கூறியுள்ளார். இதை மற்றவர்களும் ஏற்க, ‘டூ டி பிரான்ஸ்’ சைக்கிள் போட்டியை நடத்துவதாக 1903-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதன்படி மே மாதம் 31-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை 5 கட்டங்களாக ‘டூர் டி பிரான்ஸ்’ சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டது. 2,428 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த சைக்கிள் பந்தயத்தில் மொத்தம் 60 வீரர்கள் பங்கேற்றனர். ஆனால் போட்டியின் பாதியிலேயே பலர் வெளியேற 21 வீரர்கள் மட்டுமே பந்தய தூரத்தை நிறைவு செய்தனர். மவுரிஸ் காரின் என்பவர் இந்த முதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
-------------------------------------------------------------
ஜனவரி 20
ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்த அமெரிக்கா
நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகள், சில சமயம் விளையாட்டுப் போட்டிகளை பாதிப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம் 1980-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது நடந்தது.
1979-ம் ஆண்டில் சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புக் குரலை எழுப்பி வந்தன. ஆனால் இதையெல்லாம் சோவியத் யூனியன் ஒரு பொருட்டாக கருதவில்லை. இந்தச் சூழலில்தான் 1980-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை மாஸ்கோ நகரில் நடத்த சோவியத் யூனியன் தயாராகி வந்தது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்ததால், சோவியத் யூனியனில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்புக் குரல் எழுப்பின. ஆனால் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி அங்கு நடைபெறுவது உறுதியானதும் சில நாடுகள் அதைப் புறக்கணிகலாமா என்று யோசித்தன.
இந்தச் சூழலில்தான் 1980-ம் ஆண்டு, ஜனவரி 20-ம் தேதி மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியை தங்கள் நாடு புறக்கணிக்கப் போவதாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார். அத்துடன் இப்போட்டியை மற்ற நாடுகளும் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இக்கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு குத்துச்சண்டை வீரர் முகமது அலியை சிறப்பு தூதராக அனுப்பினார்.
தங்களைப் பின்பற்றி நேட்டோ ஒப்பந்த நாடுகள் பலவும் இந்த ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் என்று அமெரிக்கா நம்பியது. ஆனால் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்த பிரிட்டனும், ஆஸ்திரேலியாவும் தங்கள் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பியது. இது அமெரிக்காவுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. அதே நேரத்தில் ஜப்பான், மேற்கு ஜெர்மனி உள்ளிட்ட 65 நாடுகள் இந்த ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணித்தன. அதனால் 1980-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டி களையிழந்து காணப்பட்டது.
----------------------------------------------
ஜனவரி 21
கரை சேர்த்த பயிற்சியாளர்
முன்னணி வீரர்களின் காயம், 3 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விலகல், முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி என பல சிக்கல்கள் இருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஓரளவு கவுரவமான நிலையை எட்டியதில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பங்கும் முக்கியம். கண்ணுக்கு தெரியாத அஸ்திவாரமாய் இருந்து, இந்திய அணியை கரைசேர்த்த ரவி சாஸ்திரியைப் பற்றி தெரிந்துகொள்வோம்:
1962-ம் ஆண்டு மும்பையில் பிறந்த ரவி சாஸ்திரி, 14 வயது முதல் கிரிக்கெட் போட்டிகளில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார். ஆரம்ப கட்டத்தில் தான் படித்த டான் பாஸ்கோ பள்ளிக்காக ரவி சாஸ்திரி கிரிக்கெட் போட்டிகளில் ஆடினார். அவரது தலைமையில் டான் பாஸ்கோ பள்ளி, 1976-ம் ஆண்டில் மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றை எட்டியது.
1981-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, கல்லூரி மாணவரான ரவி சாஸ்திரியை மாற்று வீரராக அழைத்துச் சென்றனர். இத்தொடரில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான திலிப் ஜோஷிக்கு காயம் ஏற்பட, ரவி சாஸ்திரிக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. சுழற்பந்து வீச்சாளரான ரவி சாஸ்திரிக்கு முதலில் பேட்டிங் வராது. 10-வது பேட்ஸ்மேனாகத்தான் அவர் களம் இறங்குவார். ஆனால் இதன்பிறகு பேட்டிங்கில் தீவிர கவனம் செலுத்திய ரவி சாஸ்திரி, ஒரு கட்டத்தில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக மாறினார்.
80 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரவி சாஸ்திரி, 3,830 ரன்களைக் குவித்துள்ளார். அதே நேரத்தில் 150 ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 3,108 ரன்களைக் குவித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 151 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 129 விக்கெட்களையும் வீழ்த்தி கபில்தேவுக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ளார்.
--------------------------------------------------
ஜனவரி 22
பாட்மிண்டன் வரலாறும் இந்தியாவும்
இந்தியாவில் சமீப காலமாக மக்களிடையே பிரபலமாகி வரும் விளையாட்டு பாட்மிண்டன். சாய்னா நெவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் என பலர் அடுத்தடுத்து சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் பட்டங்களையும், பதக்கங்களையும் வென்று வருவது, இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்தியாவில் பாட்மிண்டன் பிரபலமானது வேண்டுமானால் இப்போதாக இருக்கலாம். ஆனால் இந்த விளையாட்டு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றியிருக்கிறது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்தியா மட்டுமின்றி, சீனா, கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் இந்த விளையாட்டு இருந்துள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் இங்கிருந்து மற்ற செல்வங்களை எடுத்துச் சென்றதுபோல் பாட்மிண்டன் விளையாட்டையும் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்தியாவில் தங்கியிருந்த பிரிட்டன் ராணுவத்தினர், இந்த விளையாட்டைக் கற்க, பின்னர் அவர்கள் மூலமாக அது பிரிட்டனில் பரவியுள்ளது. பின்னர் அங்கிருந்து ஐரோப்பா கண்டம் முழுமைக்கும் பாட்மிண்டன் விளையாட்டு பரவியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் பாட்மிண்டன் விளையாட்டுக்கென்று முறையான விதிகள் ஏதும் இல்லை. இந்த சூழலில் 1867-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்கள் பாட்மிண்டன் விளையாட்டுக்கென்று சில விதிகளை உருவாக்கி உள்ளனர்.
பாட்மிண்டன் விளையாட்டுக்கென்று முதலாவது கிளப், 1877-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ‘தி பாத் பாட்மிண்டன் கிளப்’ என்று இதற்கு பெயரிடப்பட்டது. இந்தியாவில் 1899-ம் ஆண்டு ‘இந்திய பாட்மிண்டன் கூட்டமைப்பு’ தொடங்கப்பட்டது.
1934-ம் ஆண்டு, சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு தொடங்கிய பிறகு, சர்வதேச அளவிலான பாட்மிண்டன் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த கூட்டமைப்பில் 1936-ம் ஆண்டில் இந்தியா இணைந்தது. 1992-ம் ஆண்டில் பார்சிலோனா நகரில் நடந்த போட்டி முதல், பாட்மிண்டன் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் தீபங்கர் பட்டாச்சார்யா, விமல் குமார், மதுமிதா பிஸ்ட் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment