ஏப்ரல் 2
மகுடம் சூடிய இந்தியா
ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-வது முறையாக மகுடம் சூடிய நாள் ஏப்ரல் 2, 2011.
இந்திய கிரிக்கெட் அணி, முதல் முறையாக 1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள், அந்த கோப்பையை இந்தியாவால் வெல்ல முடியவில்லை. குறிப்பாக 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில், முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த சமயத்தில் தோனியை கேப்டனாக கொண்டு, இளம் வீரர்கள் அதிகம் கொண்ட இந்திய அணியை உருவாக்கும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு ஈடுபட்டது.
டிராவிட், கங்குவி, லக்ஷ்மண் போன்ற மூத்த வீரர்கள் ஓரம்கட்டப்பட்டு, ரெய்னா, விராட் கோலி, போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருபுறம் சச்சின், சேவக் போன்ற அனுபவமிக்க மூத்த வீரர்களையும், மறுபுறம் இளம் வீரர்களையும் கொண்ட கலவையான இந்திய அணி, 2011-ல் நடந்த உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே சீறிப் பாய்ந்தது.
கால் இறுதியில் ஆஸ்திரேலியாவையும், அரை இறுதியில் பாகிஸ்தானையும் துவம்சம் செய்த இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் இலங்கை சவால் விடுத்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களைக் குவித்தது. அன்றைய காலகட்டத்தில் இது வலுவான ஸ்கோராக கருதப்பட்டது.
அடுத்து ஆடிய இந்திய அணியில் சேவாக் (0), சச்சின் (18) ஆகியோர் குறைந்த ரன்களில் அவுட் ஆக, கவுதம் காம்பீரும் (97 ரன்கள்) கேப்டன் தோனியும் (91 ரன்கள்) தூண்களாய் நின்று இந்தியாவைக் காத்தனர். கவுதம் காம்பீர் இடையில் அவுட் ஆனாலும் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த தோனி இந்தியாவைக் கரைசேர்த்து கோப்பையை வாங்கிக் கொடுத்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாளாக ஏப்ரல் 2 மாறியது.
ஏப்ரல் 3
ஈட்டியின் பயணம்
நம் முன்னோர்கள், வேட்டையாடுவதற்காக முதலில் பயன்படுத்திய ஆயுதம் ஈட்டியாகத்தான் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் அதை வைத்து நிச்சயம் தங்களுக்குள் போட்டியிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஈட்டி எறியும் போட்டி எப்போது தோன்றியது என்பதற்கான குறிப்புகள் ஏதும் வரலாற்றில் இல்லை. ஆனால் கிமு 708-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பென்டத்லான் போட்டியின் ஒரு அங்கமாக ஈட்டி எறியும் போட்டி இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதைவைத்து ஆதிகாலத்து விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறியும் போட்டியும் ஒன்று என்பது நிரூபணமாகி உள்ளது. நவீன ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் பிரிவில் 1908-ம் ஆண்டிலும், பெண்கள் பிரிவில் 1932-ம் ஆண்டிலும் ஈட்டி எறியும் போட்டிகள் அறிமுகமாகி உள்ளன.
ஈட்டி எறியும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், 2.6 முதல் 2.7 மீட்டர் நீளமும், 800 கிராம் எடையும் கொண்ட ஈட்டியைத் துக்கிக்கொண்டு சிறிது தூரம் ஓடிவந்து, குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஓங்கி வீசவேண்டும். அப்படி வீசி முடித்தவுடன் திரும்பாமல் நேராக நிற்க வேண்டும். குறிப்பிட்ட எல்லைக் கோட்டை தாண்டிச் சென்றும் ஈட்டியை வீசக்கூடாது. வீசப்படும் ஈட்டியின் முனை எந்த இடத்தில் முதலில் படுகிறதோ அந்த இடத்தை வைத்துதான் ஈட்டி வீசப்பட்ட தூரம் அளக்கப்படும். அதிக தூரத்துக்கு ஈட்டியை எறியும் வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். போட்டியின்போது ஒவ்வொரு வீரருக்கும் 4 முதல் 6 வாய்ப்புகள் வழங்கப்படும். இதேபோல் பெண்கள் பிரிவில் பங்கேற்கும் வீராங்கனைகள் 2.2 முதல் 2.3 மீட்டர் நீளமும் 600 கிராம் எடையும் கொண்ட ஈட்டிகளைப் போட்டியில் பயன்படுத்த வேண்டும். ஈட்டி எறியும் போட்டியைப் பொறுத்தவரை ஐரோப்பிய வீரர்கள்தான் இதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
ஏப்ரல் 4
ஒலிம்பிக்கை குறிவைக்கும் சென்னைப் பெண்
இந்தியாவில் அதிகம் பிரபலமாகாத விளையாட்டு பாய்மர படகுப் போட்டி. இந்த விளையாட்டில் இந்தியாவின் கொடியை உயர்த்திப் பிடிக்க வந்துள்ளார் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன். 23 வயது வீராங்கனையான நேத்ரா குமணன் 2019-ம் ஆண்டு, மியாமியில் நடந்த ஹெம்பல் வேர்ல்ட் கப் சீரிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தற்போது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
நேத்ராவின் தந்தை குமணன், சொந்தமாக ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது மகளுக்கு படகுப் போட்டியில் ஆர்வம் இருப்பது தெரிந்ததும், அவர் அதில் முன்னேறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார். இதுபற்றி கூறும் நேத்ரா, “என் முயற்சிகளுக்கு துணையாக என் பெற்றோர் பாறைபோல் உறுதியாக இருக்கிறார்கள். என் பயிற்சிக்கு நிறைய செலவானாலும், அவர்கள் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்” என்கிறார்.
2014 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்ற நேத்ராவின் ஒரே லட்சியம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுதான். இதற்காக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற கடுமையாக உழைத்து வருகிறார் நேத்ரா. ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஓமன் நாட்டில் நடக்கவுள்ள முசானா ஓபன் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றால், ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு தகுதிபெற முடியும் என்பதால் அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
“பாய்மரப் போட்டிகளில் பங்கேற்க உடல் வலிமை மட்டுமின்றி, மன வலிமையும் மிகவும் முக்கியம். அதுதான் நமது வெற்றிக்கு வழிவகுக்கும்” என்று கூறும் நேத்ரா, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று, இந்தியாவுக்கு பதக்கத்துடன் திரும்ப வாழ்த்துவோம்.
ஏப்ரல் 5
அன்று தண்ணீருக்கு பயந்தவர்
இன்று தண்ணீரில் சாதிக்கிறார்
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே படகு ஓட்டும் வீரரான தத்து பாபன் பொகானலின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 5).
1991-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தத்து. அவரது அப்பா ஒரு விவசாயி. கூடவே கிணறு வெட்டும் வேலைக்கும் சென்றுவந்தார். தத்துவுக்கு 2 தம்பிகள். பள்ளி இறுதியில் படிக்கும் காலத்திலேயே தன் தந்தையுடன் சேர்ந்து தத்துவும் கிணறு வெட்டும் வேலைக்கும், விவசாய வேலைக்கும் சென்று வந்தார்.
இந்நிலையில் 2011-ம் ஆண்டு அவர்கள் குடும்பத்தில் புயல் வீசியது. தத்துவின் தந்தை திடீரென இறந்தார். அதோடு அவர் வாங்கிய கடன்களும் குடும்பத்தின் கழுத்தை நெறித்தன. அப்பாவின் கடன்களை அடைக்க, வீட்டில் இருந்த டிராக்டரும், சிறிது விவசாய நிலமும் விற்கப்பட்டது. மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தத்து கையைப் பிசைந்துகொண்டிருந்தார். அப்போதுதான் ராணுவத்தில் ஆட்களைச் சேர்ப்பதற்கான முகாம் நடைபெறுவதாக அவருக்கு தகவல் தெரிந்தது. தன் குடும்பத்தின் கஷ்டங்களைத் தீர்க்க ராணுவத்தில் சேர்ந்தார் தத்து.
இந்த நேரத்தில் ராணுவத்தில் இருந்த படகோட்டும் பயிற்சியாளரான இஸ்மாயில் பேக் என்பவரின் பார்வையில் தத்து பட்டார். 6 அடி 4 அங்குல உயரம் கொண்ட தத்துவின் உடல்வாகு, படகோட்டும் போட்டிக்கு ஏற்றதாக இருப்பதாக அவர் கருதினார். இதுபற்றி தத்துவிடம் கூற, அவரோ, “எனக்கு தண்ணீர் என்றாலே பயம். நீச்சல் தெரியாது. அதனால் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் இஸ்மாயில் பேக் விடவில்லை. அவருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து, பின்னர் படகில் ஏற்றினார். சில நாட்களிலேயே படகு ஓட்டும் பிரிவில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார் தத்து. இன்று தண்ணீர் பயத்தை வென்று இந்தியாவின் முன்னணி படகு ஓட்டும் வீரராக திகழ்கிறார் தத்து.
No comments:
Post a Comment