ஏப்ரல் 10
கேப்டனை மாற்றாத சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களின் முதல் போட்டியில் ஆடவுள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கிய காலம் முதல், இதுவரை தங்கள் கேப்டனை மாற்றாத ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். முதல் தொடரில் இருந்து இதுவரை அந்த அணியின் கேப்டனாக தோனியே நீடிக்கிறார்.
போட்டிகளின்போது எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் போட்டி விதிகளை முழுமையாக கடைபிடித்து ஆடியதற்காக அதிக முறை (6 முறை) ஃபேர் பிளே அவார்ட் வாங்கிய அணி என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ளது. அத்துடன் சென்னை அணி ஐபிஎல் தொடரில் 8 முறை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
தங்கள் சொந்த மைதானத்தில் (சென்னை) அனைத்து போட்டிகளையும் வென்ற ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. 2011-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னையில் நடந்த அனைத்து போட்டிகளிலும் வென்று, சென்னை அணி இந்த சாதனையை படைத்துள்ளது.
ஒரே தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் சென்னை வீரருக்கே உள்ளது. 2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 32 விக்கெட்களை வீழ்த்தி பிராவோ இந்த சாதனையை படைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸியில் மதுபான நிறுவனம் ஒன்றின் லோகோ அச்சிடப்பட்டுள்ளது. தான் மதுபானங்களுக்கு எதிரான கொள்கை உள்ளவன் என்பதால், அந்த லோகோவை தனது ஜெர்ஸியில் அச்சிடக் கூடாது என்று மொயின் அலி, அணி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளார். அவரது உணர்வுகளுக்கு மதிப்பளித்த அணி நிர்வாகம், அவரது ஜெர்ஸியில் இருந்து மட்டும் அந்த லோகோவை நீக்கியுள்ளது.
ஏப்ரல் 11
ரசிகராக சென்று பதக்கம் வென்ற வீரர்
1896-ல் நடந்த முதலாவது ஒலிம்பிக்ஸில், ஆண்களுக்கான டென்னிஸ் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை ஜான் பியஸ் போலண்ட் கைப்பற்றினார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர், இங்கிலாந்துக்காக ஏப்ரல் 11, 1896-ல் இந்த தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஜான் பியஸ் போலண்ட், டப்ளின் நகரில் பிறந்தவர். தனிப்பட்ட டியூஷன் மூலம் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர், பின்னர் பிர்மிங்காமில் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இதைத்தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை படித்தார். ஜான் லூயிஸைப் பொறுத்தவரை, இளம் வயதில் அவருக்கு விளையாட்டுகளின் மீது அதிக ஆர்வம் இருந்ததில்லை. பொழுதுபோக்குக்காக டென்னிஸ் மட்டும் ஆடிவந்துள்ளார். இந்த சூழலில் அவர் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருந்த காலத்தில், முதலாவது ஒலிம்பிக் போட்டி ஏதென்ஸில் நடக்கவுள்ளதாக கேள்விப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த ஒலிம்பிக் போட்டியை பார்ப்பதற்காக அவர் ஏதென்ஸ் நகருக்கு பயணமானார்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, கிரேக்க தடகள வீரர் ஒருவருடன் இரவு உணவு உண்பதற்காக ஜான் லூயிஸ் சென்றுள்ளார். அவருடன் பேசும்போது, ஒலிம்பிக்கில் டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்க போதுமான வீரர்கள் முன்வரவில்லை என்று கேள்விப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த ஒலிம்பிக்கில், டென்னிஸ் போட்டியில் தான் பங்கேற்றால் என்ன என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் பங்கேற்க, இவர் பெயர் கொடுத்துள்ளார். தொழில்முறை டென்னிஸ் வீரர் இல்லை என்பதால், போட்டிகளின் போது அணிவதற்கான சரியான காலணிகள்கூட இவரிடம் இல்லை. இருப்பினும் இப்போட்டியில் அதிர்ஷ்டம் அவரது பக்கம் இருந்தது. ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.
இதே டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் ஜெர்மனி அணியின் 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீரருடன் இணைந்து விளையாடிய ஜான் லூயிஸ், இதிலும் தங்கப்பதக்கத்தை வென்றார்.
---------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் 12
இந்தியா துரத்திய இமாலய இலக்கு
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 4-வதாக பேட்டிங் செய்யும் அணிகள் 250 ரன்களை எட்டுவதே பெரிய விஷயமாக உள்ளது. இதனாலேயே டாஸில் வெற்றி பெறும் அணிகள் பெரும்பாலும் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்கும். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் 4-வதாக பேட்டிங் செய்து, 406 ரன்களைத் துரத்திப் பிடித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 1976-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணி இச்சாதனையைப் படைத்தது.
இந்திய அணிக்கு கவாஸ்கர் வந்து சேர்ந்த காலம் அது. அவருக்கு துணையாக அப்போது குண்டப்பா விஸ்வநாத்தும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றிபெற, இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது.
இந்தச் சூழலில் 3-வது டெஸ்ட் போட்டி குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 359 ரன்களையும், இந்தியா 228 ரன்களையும் சேர்த்தது. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, காளிசரணின் சதத்தின் உதவியால் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை எடுத்தது. இந்திய அணி வெற்றிபெற வேண்டுமானால் 406 ரன்களை எடுக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங்காக 256 ரன்களே இருந்தன.
முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் சுருண்ட இந்தியாவை, 2-வது இன்னிங்ஸில் மேலும் குறைந்த ரன்களில் சுருட்டலாம் என்று மேற்கிந்திய பந்துவீச்சாளர்கள் நினைத்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக விஸ்வரூபம் எடுத்து நின்றது இந்திய பேட்டிங் வரிசை. கவாஸ்கர் 102 ரன்களையும், விஸ்வநாத் 112 ரன்களையும் குவிக்க 4 விக்கெட் இழப்புக்கு 406 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது இந்தியா.
ஏப்ரல் 13
செஸ் ராஜா கேரி காஸ்பரோவ்
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்கு முன்பு, செஸ் உலகில் கொடிகட்டிப் பறந்தவரான ரஷ்ய வீரரான கேரி காஸ்பரோவின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 13). இன்றைய தினம் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற ஊரில் 1963-ம் ஆண்டு கேரி காஸ்பரோவ் பிறந்தார். சுறு வயதில் தனது பெற்றோர் சதுரங்க விளையாட்டில் ஈடுபடும்போது அதை வேடிக்கை பார்ப்பது காஸ்பரோவின் வழக்கம். அப்போது அவர்கள் சிக்கலான சூழ்நிலையில் இருக்கும்போது காஸ்பரோவ் ஆலோசனைகளைக் கூறுவாராம். இதைப் பார்த்த காஸ்பரோவின் பெற்றோர், அவர் மிகச்சிறந்த செஸ் வீரராக வருவார் என்று கணித்து, அருகில் உள்ள செஸ் அகாடமியில் சேர்த்துள்ளனர். 7 வயதில் தந்தை இறந்த பிறகு, தாயாரின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார் கேரி காஸ்பரோவ்.
1976-ம் ஆண்டில் நடந்த சோவியத் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவ், பிறகு உள்ளூரில் புகழ்பெற்ற செச் வீரரான அலெக்ஸாண்டர் ஷகாரோவிடம் பயிற்சி பெற்றுள்ளார். 1984-ம் ஆண்டில் 2,710 புள்ளிகளுடன் உலக செஸ் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 1985-ம் ஆண்டுமுதல் பலமுறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
செஸ் விளையாட்டு மட்டுமின்றி, அரசியலிலும் காஸ்பரோவ் கவனம் செலுத்தினார். 1984-ம் ஆண்டு சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த காஸ்பரோவ், 1987-ல் அதன் மத்திய கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1990-ல் அக்கட்சியில் இருந்து விலகினார்.
சர்வதேச செஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, மீண்டும் தீவிர அரசியைலில் ஈடுபட்ட காஸ்பரோவ், 2005-ல் அந்நாட்டு அதிபர் புடினுக்கு எதிராக யுனைடட் சிவில் பிரண்ட் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால் செஸ் விளையாட்டில் சாதித்த அவரால், அரசியலில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. 2007-ல் ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த காச்பரோவ், பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார்.
No comments:
Post a Comment