Powered By Blogger

Thursday, April 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - பிப்ரவரி 4 - பிப்ரவரி 7

 பிப்ரவரி 4

சாதனை மன்னன் ரிச்சர்ட் ஹாட்லி
நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான  ரிச்சார்ட் ஹாட்லி,  டெஸ்ட் போட்டிகளில் தனது 400-வது விக்கெட்டை வீழ்த்திய நாள் இன்று (பிப்ரவரி 4). 1990-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் இச்சாதனையைப் படைத்தார்.
 நியூஸிலாந்து அணிக்கு கிடைத்ததிலேயே மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ரிச்சர்ட் ஹாட்லி, 1973-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் 2 விக்கெட்களை மட்டுமே எடுத்த அவர், அடுத்தடுத்த போட்டிகளில் விஸ்வரூபமெடுத்து, சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார்.
86 டெஸ்ட் போட்டிகளில் அவர் வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை 431.  இதில் 36 முறை அவர் 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்திய ஹாட்லி, 3 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஒருசில வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவிட்டு, வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் சொதப்புவார்கள். ஆனால் ரிச்சர்ட் ஹாட்லி அப்படி இல்லை. நியூஸிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 201 விக்கெட்களை எடுத்த ஹாட்லி, வெளிநாடுகளில்  230 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இதில் 21 இன்னிங்ஸ்களில்  5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி எதிரணியினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.
 ஒருநாள் போட்டிகளிலும் நியூஸிலாந்து அணிக்கு அஸ்திவாரமாய் இருந்த ஹாட்லி, 158 விக்கெட்களை கொய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 431 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற ஹாட்லியின் சாதனையை வேண்டுமானால் பலரும் முறியடித்திருக்கலாம். ஆனால் 102 முதல்தர போட்டிகளில் 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற ஹாட்லியின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------
பிப்ரவரி 5
ரொனால்டோவும் ரத்த தானமும்
கால்பந்து உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 5). கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முழுப் பெயர், ‘கிறிஸ்டியானோ ரொனால்டோ டோஸ் சாண்டோஸ் அவிரோ’ என்பதாகும். கால்பந்து போட்டியிகளின்போது இந்த முழுப்பெயரையும் வர்ணனையாளர் சொல்லி முடிப்பதற்குள் பந்து பலரையும் கடந்துவிடும் என்பதால் கிரிஸ்டியானோ ரொனால்டோ என்று  சுருக்கி அழைக்கிறார்கள்.  
ரொனால்டோவின் அப்பா ஜோஸ், தோட்டக்காரராக இருந்தார். குடிப்பழக்கம் கொண்டவரான அவர் குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை. இதனால் ரொனால்டோவின் அம்மாதான், பல வீடுகளில் சமையல் மற்றும் துணி துவைக்கும்  வேலைகளைச் செய்து ரொனால்டோவைப் படிக்க வைத்தார். தங்களை படிக்க வைப்பதற்காக அம்மா, இரவில் நீண்ட நேரம் வரை பல்வேறு வீடுகளிலும் பணியாற்றி வந்ததாக ரொனால்டோ ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் தனது அம்மா பணத்துக்காக பட்ட கஷ்டங்களை ஈடு செய்யும் வகையில் இன்று கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
ரத்த தானம் செய்வதில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விருப்பம் அதிகம். பல முறை இவர் தனது ரத்தத்தை தானமாக கொடுத்துள்ளார். செஞ்சிலுவை சங்கத்தின் விதிகளின்படி ஒருவர் தன் உடலில் பச்சை குத்திக்கொண்டால், குறைந்தபட்சம் அடுத்த 4 மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது. தான் பச்சை குத்திக்கொண்டால் அடுத்த 4 மாதங்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற ஒரே காரணத்துக்காக அவர் பச்சை குத்தாமல் இருக்கிறாராம் ரொனால்டோ. . ரத்த தானம் செய்வதோடு மட்டுமின்றி, ஒரு முறை தனது எலும்பு மஜ்ஜையையும் ரொனால்டோ தானமாக கொடுத்துள்ளார் என்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------
பிப்ரவரி 6
ரசிகர்களை அதிரவைத்த விபத்து
விளையாட்டு உலகம் சந்தித்த மிக மோசமான விபத்துகளில் ஒன்று 1958-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி நிகழ்ந்தது.
ஜெர்மனியில் உள்ள மியூனிச் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் யூரோப்பியன் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, தரையில் இருந்து மேலெழும்பிய சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் 8 வீரர்கள் உடபட 23 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். மான்செஸ்டர் யுனைடட் கால்பந்து அணி, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், இந்த கோர விபத்து ஏற்பட்டது, அந்த அணியின் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த விபத்துக்கு முன்னதாக மான்செஸ்டர் யுனைடட் அணி, பெல்கிரேட் நகரில் நடந்த போட்டி ஒன்றில் விளையாடி இருந்தது. இப்போட்டியில் ‘பஸ்பி பேப்ஸ்’ எனச் செல்லமாக அழைக்கப்பட்ட மான்செஸ்டர் யுனைடட் அணியினர்  ‘ரெட் ஸ்டார்’ அணிக்கு எதிரான போட்டியை 3-3 என்ற கோல்கணக்கில் டிரா செய்திருந்தனர். இருப்பினும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் மான்செஸ்டர் யுனைடட் அணி அரை ஐரோப்பியன் கோப்பை கால்பந்தின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
விபத்து நடந்த நாளில், அவர்கள் பயணம் செய்த விமானம் பெல்கிரேடில் சுமார் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. அதில் பயணித்த மான்செஸ்டர் யுனைடட் வீரர் ஒருவர் தனது பாஸ்போர்ட்டை ஓட்டல் அறையில் மறந்துவிட்டு வந்ததே இதற்கு காரணம். இதன்பிறகு எரிபொருள் நிரப்புவதற்காக மியூனிச் நகருக்கு வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
மியூனிச் நகரில் இருந்த பனிப்பொழிவால் 2 முறை இந்த விமானத்தை மேலே எழுப்ப விமானி ஜேம்ஸ் தாயின் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் 3-வது முறையாக எடுத்த முயற்சியில் விபத்து ஏற்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
----------------------------------------------------------------------------------------------
பிப்ரவரி 7
புதிய வரலாறு படைத்த கும்ப்ளே
 டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் 10 விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே சாதனை படைத்த நாள் இன்று (பிப்ரவரி 7).
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் அசைக்க முடியாத இந்த சாதனையைப் படைத்தார் அனில் கும்ப்ளே. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றிருந்தது.   இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி ஆட வந்தபோது, வெற்றிபெற 420 ரன்களை எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் தொடக்க ஜோடியான சயீத் அன்வரும், அப்ரிடியும் 100 ரன்களைக் கடந்து முன்னேறிக் கொண்டிருந்தனர்.  
இந்த இன்னிங்ஸின் தொடக்கத்தில் புட்பால் ஸ்டாண்ட் முனையில் பந்துவீசிய அனில் கும்ப்ளே, 6 ஓவர்களில் விக்கெட் எதையும் எடுக்காமல் 27 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இந்தச் சூழலில் பாகிஸ்தானின் தொடக்க ஜோடியைப் பிரிக்கும் முயற்சியாக பெவிலியன் முனையில் இருந்து கும்ப்ளேவை பந்துவீச வைத்தார் கேப்டன் அசாருதீன். இது பலன் கொடுத்தது. உறுதியாக ஆடிக்கொண்டிருந்த அப்ரிடியின் விக்கெட்டை முதலில் கொய்த கும்ப்ளே, அடுத்தடுத்து இஜாஸ் அகமது, இன்சமாம் உல் ஹக், முகமது யூசுப் ஆகியோரின் விக்கெட்களைத் தெறிக்கவிட்டார். ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பத் தொடங்கியது.
முதல் 6 விக்கெட்களையும் கைப்பற்றிய நிலையில்தான்,  10 விக்கெட்களையும் தன்னால் எடுக்க முடியும் என்ற எண்ணம் கும்ப்ளேவுக்கு வந்தது. இந்தச் சூழலில் மற்ற பந்துவீச்சாளர்களும் வேண்டுமென்றே விக்கெட் வீழ்த்தாமல் கும்ப்ளேவின் சாதனைக்காக தோள்கொடுக்கத் தொடங்கினர். இறுதியில் 47 ரன்களை மட்டுமே கொடுத்து பாகிஸ்தானின் 10 விக்கெட்களையும் விழுங்கினார் அனில் கும்ப்ளே. கிரிக்கெட் உள்ள காலம் வரை தனது புகழ் நிலைக்கும் அளவுக்கு வரலாற்றுச் சாதனையை படைத்தார்.  

No comments:

Post a Comment