மார்ச் 29
ஆலன் பார்டரின் கோபம்
இந்திய கிரிக்கெட் உலகில் சுனில் கவாஸ்கர் எப்படி முக்கிய இடத்தை வகிக்கிறாரோ, அதேபோல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் முக்கிய இடம் வகிக்கும் பேட்ஸ்மேன் ஆலன் பார்டர். கவாஸ்கருக்கு அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்த ஆலன் பார்டர், 1987-ல் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்து, தனது அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்துள்ளார்.
1955-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் நகரில் பிறந்த ஆலன் பார்டர், 156 டெஸ்ட் போட்டிகளில் 11,174 ரன்களைக் குவித்ததுடன் 39 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல் 273 ஒருநாள் போட்டிகளில் 6,524 ரன்களைக் குவித்து 73 விக்கெட்களை எடுத்துள்ளார்.
1979-80-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 4 ரன்களில் அவுட் ஆகியுள்ளார் பார்டர். அவரால் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெவிலியன் திரும்பியவர் தலையைக் குனிந்தவாறே டிரஸ்ஸிங் ரூமுக்குள் சென்று பேட்டையும் கிளவுஸ்களையும் கழற்றி வீசியுள்ளார். இங்கிலாந்து அணி வீரர்களை சத்தமாக திட்டியவாறே தனது கால் காப்புகளையும் கழற்றி வீசியவர், பின்னர் அவற்றை வைப்பதற்காக டிரஸ்ஸிங் ரூமில் இருந்த தனது பையைத் தேடியுள்ளார். அப்போதுதான் தான் ஏதோ ஞாபகத்தில் இங்கிலாந்து அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்குள் தவறுதலாக நுழைந்தது அவருக்கு தெரிந்தது.
இங்கிலாந்து வீரர்களை அவர் திட்டியபோது அந்த அறைக்குள் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த சிலரும் இருந்துள்ளனர். கோபத்தில், தான் டிரஸ்ஸிங் ரூம் மாறி வந்ததுடன் இங்கிலாந்து வீரர்களை அவர்கள் முன்பே திட்டியதற்காக வெட்கப்பட்டார். இருப்பினும் அதே போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 138 ரன்களைச் சேர்த்தார். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி, தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆலன் பார்டர்.
------------------------------------------------------------------------------------------------------------
மார்ச் 30
தடகள உலகின் புதிய நட்சத்திரம்
இந்திய தடகள உலகில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் எம்.ஸ்ரீசங்கர். சில நாட்களுக்கு முன் நடந்த நீளம் தாண்டும் போட்டியில் 8.26 மீட்டர் நீளம் தாண்டி புதிய தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீசங்கரின் இந்த சாதனைக்கு, அவரது பெற்றோரும் ஒரு காரணம். ஸ்ரீசங்கரின் அப்பா முரளி, அம்மா பிஜிமோள் ஆகியோர் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் பல தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி கூறும் ஸ்ரீசங்கர், “சிறுவயது முதலே நான் விளையாட்டுகளின் மீது காதலோடு இருந்தேன். என் பெற்றோர் இருவரும் தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றிருந்தது எனக்கு தூண்டுகோலாக இருந்தது. அத்துடன் என் உறவினர்கள் பலரும் தடகள உலகில் இருந்ததால், சிறு வயதில் இருந்தே எனக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்” என்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் ஓட்டப்பந்தய வீரராகத்தான் ஸ்ரீகுமார் இருந்துள்ளார். ஜூனியர் அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். இந்த காலகட்டத்தில் நீளம் தாண்டுதல் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் வீரரான ஸ்ரீசங்கரின் அப்பாதான் அவரை நீளம் தாண்டும் போட்டிகளில் பங்கேற்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார்.
10-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் நீளம் தாண்டும் போட்டிகளில் பயிற்சி பெறத் தொடங்கிய ஸ்ரீசங்கர், தனது அப்பா காட்டிய வழியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். ஆரம்பத்தில் தனது அப்பாவிடம் பயிற்சி பெற்ற ஸ்ரீசங்கர், பின்னர் வெளிநாட்டு பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய ஸ்ரீசங்கர், தற்போது இந்தியாவில் இதுவரை யாரும் தாண்டாத அளவுக்கு நீளம் தாண்டி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் அனைத்து நாடுகளையும் அவர் கவர்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மார்ச் 31
இந்தியாவின் செஸ் ராணி
இந்திய செஸ் உலகில் ராணியாக வலம்வரும் கொனேரு ஹம்பியின் பிறந்தநாள் இன்று.
1987-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள குடிவாடா என்ற ஊரில் கொனேரு ஹம்பி பிறந்தார். ‘ஹம்பி’ என்ற வார்த்தைக்கு வெற்றி என்று அர்த்தம். அதனால் அப்பெயரையே தனது மகளுக்கு சூட்டினார் கொனேரு ஹம்பியின் அப்பா கொனேரு அசோக்.
முன்னாள் செஸ் வீரரான அசோக், தன்னைப் போலவே தனது மகளும் செஸ் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக 5 வயதிலேயே ஹம்பியை செஸ் பயிற்சிக்கு அனுப்பினார். செஸ் விளையாட்டில் புகழ்பெற்ற வீராங்கனைகளாக இருந்த பலரது வாழ்க்கைக் கதைகளையும் சொல்லி உற்சாகமூட்டினார். ஒருபுறம் பயிற்சி, மறுபுறம் அப்பா கொடுக்கும் உற்சாகம் ஆகியவை கொனேரு ஹம்பியின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன. ஒரு கட்டத்தில் தனது மகளின் முன்னேற்றத்துக்கு துணைபுரிவதற்காக, பல்கலைக்கழகத்தில் தான் பார்த்துவந்த வேலையை உதறி, போட்டிக்காக மகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் துணையாகச் சென்றார்.
அப்பாவின் உழைப்புக்கு சற்றும் குறையாமல் போராடிய கொனேரு ஹம்பி, 10, 12, 14 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டிகளில் பட்டம் வென்றார். தனது 14 வயதிலேயே செஸ் வீராங்கனைகள் பட்டியலில் 3-வது இடம்பிடித்த கொனேரு ஹம்பி, 2,539 புள்ளிகளை ஈட்டினார். 1997-ல் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற ஹம்பி, தனது 15-வது வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன்மூலம் மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற அவர், இன்னும் இந்தியாவின் முன்னணி செச் வீராங்கனையாக உள்ளார். தனது சாதனைகளுக்காக, சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான பிபிசி விருதையும் அவர் வென்றுள்ளார்.
ஏப்ரல் 1
வெங்சர்க்காருக்கு உதவாத சக வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை பேட்டிங்கின் முக்கிய தூணாக இருந்தவர் திலிப் வெங்சர்க்கார். அவர் புகழின் உச்சத்தில் இருந்த நிலையில், விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்காக துபாயில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நாள் ஏப்ரல் 1.
1982-ம் ஆண்டில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்தியா லெவன் அணிக்கும், இன்திகாப் ஆலம் தலைமையிலான பாகிஸ்தான் லெவன் அணிக்கும் இடையேயான ஒருநாள் காட்சிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, துபாய் சென்றது. அந்நாட்டின் விதிப்படி, விமான நிலையத்தில் மற்ற பயணிகளைப்போல், கிரிக்கெட் வீரர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்காக அவர்கள் அனைவரும் சக பயணிகளுடன் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். அப்போது அதே வரிசையில் இருந்த சில சினிமா நட்சத்திரங்களை முதலில் பரிசோதித்து அனுப்பியுள்ளனர் சுங்கத் துறை அதிகாரிகள். கிரிக்கெட் வீரர்கள் அப்போது அத்தனை பிரபலமானவர்களாக இல்லாததால் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டனர்.
இயல்பாகவே கொஞ்சம் கோபக்காரரான திலிப் வெங்சர்க்காருக்கு இது பிடிக்கவில்லை. அதனால் அவர் சுங்கத் துறை அதிகாரிகளை கடும் சொற்களால் விமர்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த சுங்கத் துறை அதிகாரி, அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியேறாமல் தடுத்ததுடன், இந்தியாவுக்கு அவரை திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தச் சூழலில் கவாஸ்கர் உட்பட எந்த வீரர்களும் வெங்சர்க்காருக்காக பரிந்து பேசவில்லை.
துபாயில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதை விட, தனக்காக யாரும் பரிந்து பேசாதது வெங்சர்க்காருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்திய அணிக்காக ஆடினாலும், பல காலம் மற்ற வீரர்களிடம் இருந்து தன்னை அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். அத்துடன் கவாஸ்கருக்கும் வெங்சர்க்காருக்கும் இடையே தனிப்பட்ட பகையும் மூண்டது. அந்த பகை இன்னும் நீடிப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment