மார்ச் 8
டென்னிஸ் உலகின் மகாராணி
கடந்த நூற்றாண்டில் டென்னிஸ் உலகைக் கட்டி ஆண்ட மகாராணி என்று மார்ட்டினா நவரத்திலோவாவைச் சொல்லலாம். ஒற்றையர் பிரிவில் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன், 167 தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்ற மார்ட்டினா நவரத்திலோவா, இரட்டையர் பிரிவில் 177 பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் வீராங்கனைகளிலேயே 10 மில்லியன் டாலர்களை சம்பாதித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை 1986-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி அவர் படைத்தார்.
செக் நாட்டில் உள்ள பரேக் நகரில் 1956-ம் ஆண்டு பிறந்தவர் மார்ட்டினா நவரத்திலோவா. அவரது தந்தை மிரோஸ்லாவ் சுபெர்ட். மார்ட்டினாவின் தாயார் ஜானா சுபெர்ட், ஜிம்னாஸ்டிக், டென்னிஸ் மற்றும் ஸ்கீயிங் ஆகிய போட்டிகளில் வல்லவராக இருந்தார். மார்ட்டினாவின் பாட்டியும் இரண்டாம் உலகப் போருக்கு முன்பு செக் நாட்டுக்காக பல்வேறு டென்னிஸ் போட்டிகளில் ஆடியுள்ளார். மார்ட்டினாவுக்கு 3 வயதாக இருந்தபோதே, அவரது பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, நவ்ரெட்டில் என்பவரை மார்ட்டினாவின் தாயார் திருமணம் செய்துகொண்டார்.
மார்ட்டினாவின் தயார், தனது மகளையும் தன்னைப்போலவே விளையாட்டு வீராங்கனையாக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் 4 வயது முதலே அவருக்கு டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி கொடுத்தார். ஆரம்ப காலகட்டங்களில் தனது பாட்டி பயன்படுத்திய மரத்தால் ஆன டென்னிஸ் ராக்கெட்டையே மார்ட்டினாவும் பயன்படுத்தி வந்துள்ளார். அம்மா மற்றும் பாட்டி தந்த ஊக்கத்தால், வேகமாக முன்னேறிய மார்ட்டினா நவரத்திலோவா, தனது 15-வது வயதிலேயே செக் நாட்டின் தேசிய டென்னிஸ் சாம்பியன் ஆனார். இதைத்தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய மார்ட்டினா நவரத்திலோவா, 1980-களில் டென்னிஸ் உலகின் முடிசூடா ராணியாக பவனி வந்தார்.
-------------------------------------------------------------------------------------------
மார்ச் 9
இந்திய அணியின் இளம் கீப்பர்
மிகக் குறைந்த வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக பொறுப்பேற்ற பார்த்தீவ் படேலின் பிறந்தநாள் இன்று (மார்ச் 9).
1985-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி அகமதாபாத் நகரில் பிறந்த பார்த்தீவ் படேல், 2002-ம் ஆண்டில் மிகச் சிறிய வயதில் (17 வயது) இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் அப்போதைய விக்கெட் கீப்பரான அஜய் ரத்ராவுக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்போது பார்த்தீவ் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது.
முதல் போட்டியில் ரன்களை எடுக்காமல் சொதப்பியபோதிலும், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடி ரசிகர்களைக் கவர்ந்தார் பார்த்தீவ் படேல். ஒரு சில போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் ஆடி இந்தியாவுக்காக ரன்களைக் குவித்தார். குழந்தை முகம் கொண்டவரான பார்த்தீவ் படேல், இந்திய அணிக்காக மட்டுமின்றி, உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2007-ம் ஆண்டில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த 5 போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்துவந்தார். ஆனால் அந்த நேரத்தில் பெரும் புயலைப்போல் மகேந்திரசிங் தோனி வந்ததால், இந்திய அணியில் பார்த்தீவின் இடம் பறிபோனது.
இந்திய அணியில் இடம் பறிபோன நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய பார்த்தீவ், ஆரம்ப கட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தார். இதைத்தொடர்ந்து கொச்சி டஸ்கர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார்.
------------------------------------------------
மார்ச் 10
இந்தோ - பாக் எக்ஸ்பிரஸ்
கிரிக்கெட், ஹாக்கி, குத்துச்சண்டை என்று எந்த போட்டியாக இருந்தாலும், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் அனல் பறக்கும். ஆனால் இந்த இரு நாட்டு ரசிகர்களையும் ஒன்றிணைத்த பெருமை ரோஹன் போபண்ணா - ஐசாம் அல் குரேஷிக்கு உண்டு. ‘இந்தோ பாக் எக்ஸ்பிரஸ்’ என செல்லமாக அழைக்கப்படும் இந்தியாவின் போபண்ணா - பாகிஸ்தானின் குரேஷி ஜோடி டென்னிஸ் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவயதில் ஜூனியர் டென்னிஸ் போட்டிகளில் ஆடும் காலத்திலேயே இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து 2003-ம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த டென்னிஸ் போட்டியொன்றில் இருவரும் இணைந்து ஆடியுள்ளனர். இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர். இதன்பிறகு சில காலம் இணைந்து ஆடாத இந்த ஜோடி, 2007-ம் ஆண்டுமுதல் மீண்டும் சேர்ந்து ஆடத் தொடங்கியது.
ஆவேசமாக சர்வீஸ் செய்வதில் குரேஷி கெட்டிக்காரர். அற்புதமாக பிளேசிங் செய்து எதிராளியை நிலைகுலையச் செய்வதில் போபண்ணா வல்லவர். இப்படி ஒவ்வொரு விதத்தில் இருவரும் சிறந்தவர்களாய் இருக்க, டென்னிஸ் உலகில் வெற்றிகள் தேடிவந்தன.
2010-ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றை எட்டிய இந்த ஜோடி, அதே ஆண்டில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகளில் பட்டம் வென்றது. இடையில் 2014-ம் ஆண்டில் பிரிந்த இந்த ஜோடி, இப்போது மீண்டும் இணைந்து ஆட திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள குரேஷி, “ஜெயிக்கிறோமோ இல்லையோ, நாங்கள் ஜோடிசேர்ந்து ஆடும்போது, இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள், தங்கள் பகைகளை மறந்து ஒன்றாகச் சேர்ந்து எங்களுக்காக கைதட்டுவார்கள். இதைப் பெருமையாகக் கருதுகிறோம்” என்கிறார்.
-----------------------------------------------------------------------------------------------
மார்ச் 11
முதல் வெற்றியைத் தந்த கேப்டன்
ரஞ்சி கோப்பை போட்டிக்கு இணையாக உள்ளூரில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் கிரிக்கெட் தொடராக விஜய் ஹாசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டித் தொடர் விளங்குகிறது. இந்த தொடருக்கு பெயர்க் காரணமாக விளங்கும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஹசாரேவின் பிறந்தநாள் இன்று (மார்ச் 11).
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி என்ற ஊரில் 1915-ம் ஆண்டில் பிறந்தவர் விஜய் ஹசாரே. ஒரு வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய விஜய் ஹசாரே, பின்னாளில் சுழற்பந்து வீச்சாளராக மாறினார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்திருந்த கிளாரி கிம்மெட் என்ற பயிற்சியாளரின் அறிவுரையை ஏற்று பேட்டிங்கில் கவனம் செலுத்தினார்.
1946-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஹசாரே, 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 65 ரன்களைக் குவித்ததுடன், 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். பின்னாளில் இந்தியாவின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உருவெடுத்த ஹசாரே, 30 டெஸ்ட் போட்டிகளில் 2,192 ரன்களைக் குவித்துள்ளார். அத்துடன் 20 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.
முதல்தர கிரிக்கெட் போட்டியில் முச்சதம் அடித்த முதல் இந்தியர், ஒரே டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்தியர், அடுத்தடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக விஜய் ஹசாரே விளங்குகிறார். 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தும் விஜய் ஹசாரே வழிகாட்டி உள்ளார். 1952-ம் ஆண்டில் இவரது தலைமையில்தான் இந்திய அணி முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1953-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற விஜய் ஹசாரே, அதன்பிறகு சில காலம் தேர்வாளராகவும் இருந்துள்ளார்.
No comments:
Post a Comment