Powered By Blogger

Thursday, April 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - பிப்ரவரி 28 - மார்ச் 3

 பிப்ரவரி  - 28

டென்னிஸ் பாதி; மாடலிங் பாதி
கடந்த வாரம் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியனாக மகுடம் சூடியுள்ள  நவோமி ஒசாகா,  ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் வளர்ந்தது, பயிற்சி பெற்றது எல்லாமே அமெரிக்காவில்தான். ஒசாகாவின் தாய் ஜப்பான் நாட்டையும், தந்தை ஹைட்டி நாட்டையும் சேர்ந்தவர்கள்.
ஒசாகாவுக்கு 3 வயதாக இருக்கும்போது அவரது தந்தை, லியனார்ட் பிரான்கோயிஸ் அவருக்கு டென்னிஸ் பயிற்சியை அளிக்கத் தொடங்கியுள்ளார். இந்த விளையாட்டில் ஒசாகாவுக்கு பெரிய அளவில் எதிர்காலம் இருப்பதை  உணர்ந்த அவர், பின்னர் விம் ஃபிசெட் என்ற பயிற்சியாளரிடம் ஒசாகாவை  சேர்த்துள்ளார். சிமோனா ஹாலெப், கிம் கிளிஸ்டர்ஸ், ஏஞ்சலிக் கெர்பர் போன்ற வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்தவர் விம் ஃபிசெட் என்பது குறிப்பிடத்தக்கது.
2018-ம் ஆண்டு, தனது 20-வது வயதில் முதல் கிராண்ட் ஸ்லாம் (அமெரிக்க ஓபன்) பட்டத்தை ஒசாகா வென்றுள்ளார். இந்த தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸை அவர் வீழ்த்தினார்.
டென்னிஸ் போட்டிகளுக்கு இணையாக வீடியோ கேம்ஸ்களையும் நேசிக்கிறார் ஒசாகா. தினந்தோறும் 4 மணிநேரம் டென்னிஸ் பயிற்சிபெறும் ஒசாகா, அதன் பிறகு தினந்தோறும் 4 மணிநேரம் வீடியோ கேம்ஸ் ஆடுவாராம். அத்துடன் மாடலிங்கிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.  பல மாடலிங் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். கடந்த ஆண்டு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின்போதே தனது சகோதரியுடன் சேர்ந்து வடிவமைத்த முகக்கவசங்களை  அணிந்து அவர் போட்டிகளில் ஆடினார். இதில் ஒவ்வொரு முகக்கவசத்துக்கும், அமெரிக்காவில் நிறவெறியால் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வைத்திருந்தார்.
----------------------------------------------------------------------------------------------------
பிப்ரவரி 29
கிரிக்கெட் வீரர்களை  கலங்கவைக்கும் ‘யோயோ டெஸ்ட்’
சமீப காலமாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் விஷயமாக மாறியுள்ளது ‘யோயோ டெஸ்ட்’. இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டுமானால், ஒவ்வொரு வீரரும் இந்த சோதனையில் தேர்ச்சிபெற்று தாங்கள் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக நிரூபிக்க வேண்டும்.  
 
அது என்ன  ‘யோயோ டெஸ்ட்’ என்ற கேள்வி பலரது மனதிலும் எழலாம். சில மாதங்களுக்கு முன் தன்னைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம்கூட பிரதமர் மோடி இக்கேள்வியைக் கேட்டுள்ளார்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரான ஜென்ஸ் பாங்க்ஸ்போ என்பவர்தான் இந்த ‘யோயோ டெஸ்ட்’ சோதனை முறையை உருவாக்கினார். இதன்படி 20 மீட்டர்கள் இடைவெளியில் 2  கூம்புகள் வைக்கப்பட்டிருக்கும். பயிற்சியாளர் விசில் அடித்ததும், வீரர்கள் 2 கூம்புகளுக்கும் இடையே மாறி மாறி ஓடவேண்டும்.  குறிப்பிட்ட நேரத்துக்குள் வீரர்கள் இந்த தூரத்தை ஓடிக் கடக்காவிட்டால் அவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள்.

 இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள்  8 நிமிடம் 15 வினாடிகளுக்குள் இந்த 2 கூம்புகளுக்கும் இடையே 2 கிலோமீட்டர்கள் தூரம் ஓடவேண்டும். மற்ற வீரர்கள் இதே தூரத்தை 8.30 நிமிடங்களில் கடக்க வேண்டும்.
சமீபத்தில் நடந்த யோயோ டெஸ்ட்டில் விக்கெட் கீப்பர்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், பேட்ஸ்மேன் நிதீஷ் ராணா, சுழற்பந்து வீச்சாளர் ராகுல் திவாட்டியா, ஜெய்தேவ் உனட்கட், சித்தார்த் கவுல் ஆகியோர் இத்தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------
மார்ச் 1
பெண் ஹெர்குலஸின் பிறந்தநாள்

பளுதூக்கும் போட்டிகளில் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான குஞ்சராணி தேவியின் பிறந்தநாள் இன்று (மார்ச் 1).

பளுதூக்கும் போட்டியில்  இந்திய பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை முதலில் நிரூபித்தவர் குஞ்சராணி தேவி.  ‘பெண் ஹெர்குலஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் குஞ்சராணி தேவி, மணிப்பூரில் உள்ள இம்பால் நகரில் 1968-ம் ஆண்டு பிறந்தார்.  சிறு வயதிலேயே    ஹாக்கி, கால்பந்து, ஓட்டம், வலுதூக்கும்  போட்டி (பவர் லிஃப்டிங்)  என்று பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று வந்தார். 1982-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி.உஷா பதக்கங்களாக அள்ளிக் குவிக்க, அவரைப் போலவே தானும் விளையாட்டில் பெரிய நட்சத்திரமாக வர விரும்பியுள்ளார்.
 
இந்தச் சூழலில் பள்ளியில் இருந்த குஞ்சராணியின் பயிற்சியாளர், சற்று குள்ளமான அவரது உடல்வாகு, வலுதூக்கும் போட்டிகளுக்கு ஏற்றதாக இருப்பதாக அறிவுரை கூறியுள்ளார். பயிற்சியாளரின் இந்த அறிவுரையை ஏற்ற குஞ்சராணி தேவி,  இவ்விளையாட்டில் பயிற்சியை தீவிரப்படுத்தினார். 1985-ம் ஆண்டில் நடந்த முதலாவது தேசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் (வெயிட் லிஃப்டிங்) போட்டி சேர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வலுதூக்கும் போட்டிக்கு பதிலாக பளுதூக்கும் போட்டிகளில் கவனம் செலுத்தினார் குஞ்சராணி தேவி.
1987-ம் ஆண்டில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் 2 தேசிய சாதனைகளைப் படைத்தவர், அதன்பிறகு சர்வதேச போட்டிகளில் தடம் பதித்தார். 1990 மற்றும் 94-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற குஞ்சராணி தேவி, உலக பளுதூக்கும் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மத்திய அரசின் அர்ஜுனா விருது உள்ளிட்ட பல்வேறு  விருதுகளை வென்றுள்ள குஞ்சராணி தேவி, வடகிழக்கு மாநில விளையாட்டு வீரர்களிடையே பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார்.

------------------------------------------------------------------------
மார்ச் 2
விராட் கோலியின் மறுபக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, ரன்களைக் குவிப்பதில் வல்லவர் என்று எல்லோருக்கும் தெரியும். அதே நேரத்தில் அவரைப் பற்றி அதிகம் தெரியாத விஷயம் ஒன்றும் உள்ளது. கிரிக்கெட்டைப் போலவே பிசினஸ் உலகிலும் விராட் கோலி கெட்டிக்காரர் என்பதே அந்த விஷயம்.
உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக ஆர்வம் செலுத்தும் விராட் கோலி, இதையே பிசினஸாகவும் செய்து வருகிறார். ‘சிசெல்’ என்ற பெயரில் நாட்டில் பல்வேறு இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அவர் நடத்தி வருகிறார். மிக விரைவில் நாடு முழுவதும் 75 இடங்களில் இந்த உடற்பயிற்சி கூடங்களை விரிவுபடுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ‘ராங்’ (Wrogn) என்ற பெயரில் ஃபேஷன் துறையிலும் அவர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
விளையாட்டுத் துறை சார்ந்த தொழில்களிலும் ஆர்வம் செலுத்திவரும் விராட் கோலி, சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்கில் ‘யுஏஇ ராயல்ஸ்’ அணியையும்,  புரோ ரெஸ்ட்லிங் லீகில்  ‘பெங்களூரு யோதாஸ்’ அணியையும் வாங்கி நடத்தி வருகிறார்.
இத்தனை நிறுவனங்களை நடத்தினாலும் வீட்டில் வேலையாட்களை வைத்துக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் விராட் கோலி. வீட்டு வேலைகளை மனைவி அனுஷ்காவுடன் பகிர்ந்துகொள்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளாராம். அத்துடன் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை, கணவன் மனைவி இருவருமாக இணைந்து கவனித்து வருகிறார்கள்.
 ‘கோல்டன் டிராகன்’,  ‘சாமுராய் வீரன்’ உள்ளிட்ட 4 உருவங்களை தன் உடலில் பச்சை குத்தி வைத்துள்ளார் விராட் கோலி. இவை தனக்கு அதிர்ஷ்டத்தை தேடித்தரும் என்பது அவரது நம்பிக்கை.  

 

 

No comments:

Post a Comment