ஏப்ரல் 6
ஒலிம்பிக் போட்டி தொடங்கிய நாள்
உலகில் நாகரீகம் வளர்வதற்கு முன்பே, கிமு 776-ல் சில நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்க நாட்டில் நடத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த காலகட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. பின்னர் காலம் செல்லச் செல்ல, இப்போட்டியின் மதிப்பு குறைந்து பின்னர் ஒலிம்பிக் போட்டிகளே நின்று போனது.
இதைத்தொடர்ந்து நவீன யுகத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கிரேக்க நாட்டினர் 18-ம் நூற்றாண்டு முதல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இதன் தொடக்கமாக உள்ளூர் இளைஞர்கள் கலந்துகொண்ட போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பைரே டி குபெர்டின் என்பவர், நவீன ஒலிம்பிக் போட்டிக்கான அடிப்படை விதிகளை வகுத்தார். 1892-ம் ஆண்டில் சர்வதேச விளையாட்டு அமைப்புகளிடம், ஒலிம்பிக் போட்டியை மீண்டும் தொடங்குவது பற்றி அவர் விவாதித்தார். இதைத்தொடர்ந்து 1894-ம் ஆண்டில் அடந்த சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டியை மீண்டும் தொடங்க முடிவெடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 1896-ம் ஆண்டு, ஏப்ரல் 6-ம் தேதி முதலாவது ஒலிம்பிக் போட்டி ஏதன்ஸ் நகரில் தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டியில் சைக்கிளிங், கத்திச் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், தடகளம், பளுதூக்குதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய 9 பிரிவுகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டன. 13 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். முதல் நாளன்று நடந்த டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை தாண்டும் போட்டி) அமெரிக்க தடகள வீரரான ஜேம்ஸ் கோனோளி தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதைத்தொடர்ந்து நடந்த உயரம் தாண்டும் போட்டியிலும் பங்கேற்ற ஜேம்ஸ் கோனோளி, இதில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் 7
ஜெயசூர்யாவின் அதிரடி அரைசதம்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா படைத்த நாள் ஏப்ரல் 7.
1996-ம் ஆண்டு நடந்த சிங்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 17 பந்துகளில் அரைசதம் எடுத்து ஜெயசூர்யா இந்த சாதனையைப் படைத்தார்.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெயசூர்யாவின் புகழ் உச்சத்தை தொட்ட ஆண்டு என 1996-ஐ கூறலாம். இலங்கை அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அவர், தனது அதிரடி ஆட்டத்தால் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். இந்த சூழலில் சிங்கப்பூரில் நடந்த சிங்கர் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தானை சந்தித்தது இலங்கை.
டாஸில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 215 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து இலங்கை அணி களம் இறங்க, முதல் ஓவரிலேயே வகார் யூனுஸின் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி, தான் சூப்பர் பார்மில் இருப்பதை பாகிஸ்தானுக்கு கோடிட்டு காட்டினார் சனத் ஜெயசூர்யா. இதைத்தொடர்ந்து அடார் உர் ரஹ்மான் வீசிய ஒரு ஓவரில் 3 சிக்சர்கள் உட்பட 22 ரன்களைக் குவித்த ஜெயசூர்யா, 17-வது பந்திலேயே அரைசதம் அடித்து, மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் ஜெயசூர்யா 76 ரன்களைக் குவித்தபோதிலும், பாகிஸ்தானின் வலுவான பந்துவீச்சுக்கு இலங்கை அணியால் பதில் சொல்ல முடியவில்லை. 172 ரன்களில் இலங்கை அணி ஆல் அவுட் ஆக சிங்கர் கோப்பையை பாகிஸ்தான் வென்றது.
ஏப்ரல் 8
சாஸ்திரி செய்த சமாதானம்
எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்று தமிழ் சினிமாவில் காலம் காலமாக இரு துருவங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். அதேபோல் இந்திய கிரிக்கெட்டிலும் கபில்தேவ் – கவாஸ்கர், தோனி – யுவராஜ் சிங், விராட் கோலி – ரோஹித் சர்மா என்று எல்லா காலகட்டத்திலும் இரு துருவங்கள் உள்ளன.
இதில் கடந்த சில காலமாக கோலி – ரோஹித் சர்மா இடையே தனிப்பட்ட முறையில் மோதல் இருந்ததைப்போல சித்தரிக்கப்பட்டு வந்தன. அவர்களின் சில நடவடிக்கைகளும் இதை உறுதிப்படுத்துவதாய் இருந்தன. குறிப்பாக சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடருக்கு முதலில் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்படவில்லை. காயம் காரணமாக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தேர்வாளர்கள் கூறிய நிலையில், ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா ஆடியது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி கோலியிடம் செய்தியாளர்கள் கேட்க, ரோஹித் சர்மாவின் காயம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தனக்கு தெரியாது என்றார். தனது அணியில் ஆடும் வீரருக்கு என்ன நடந்தது என்றுகூட கேப்டனுக்கு தெரியாதா என்ற விமர்சனம் எழுந்தது.
அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் வீரர்களை வைத்து ரோஹித் சர்மா அணிக்குள் அரசியல் செய்வதாக அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடர், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இத்தொடரில் போட்டிகளின்போது ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மிகவும் நெருக்கமாக இருந்தனர்.
இது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருவரின் இந்த மாற்றத்துக்கு காரணம் ரவி சாஸ்திரிதான் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து தொடருக்கு முன்பிருந்த பயோ பபிள் காலத்தில் இருவரையும் அழைத்து சாஸ்திரி சமாதானம் செய்ததாகவும், அதன் பிறகே இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து உள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் 9
ஒலிம்பிக்கில் முதல் இரட்டைத் தங்கம்
முதலாவது ஒலிம்பிக் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்காக 2 தங்கப்பதக்கங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றவர் எட்வின் பிளாக். இந்த 2 தங்கப்பதக்கங்களையும் அவர் வென்ற நாள் ஏப்ரல் 9, 1896. 800 மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் அவர் இந்த தங்கப்பதக்கங்களை வென்றார்.
எட்வின் பிளாக் லண்டன் நகரில் பிறந்தவர். இருப்பினும் எட்வின் குழந்தையாக இருக்கும்போதே அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது. மெல்பர்ன் நகரில் உள்ள பள்ளியில் படித்த எட்வின் பிளாக், படிக்கும் காலத்திலேயே தடகள போட்டிகளில் சிறந்தவராக விளங்கினார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ‘பிரைஸ் அண்ட் வாட்டர்ஹவுஸ்’ என்ற நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக 1895-ல் லண்டன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பிளாக்.
தனது விளையாட்டு ஆர்வம் காரணமாக, லண்டனில் உள்ள தடகள கிளப்பில் இணைந்த எட்வின் பிளாக், இங்கிலாந்தில் நடந்த பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்தார். இந்த நேரத்தில்தான் ஏதென்ஸ் நகரில் முதலாவது ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பதைக் கேள்விப்பட்டார். ஆஸ்திரேலியாவின் சார்பில் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அவர் விருப்பம் தெரிவித்தார்.
இந்த ஒலிம்பிக் போட்டியில், ஆஸ்திரேலியாவின் சார்பில் பங்கேற்ற ஒரே வீரரான எட்வின் பிளாக், 800 மீட்டர் ஓட்டத்தில் 2 நிமிடம் 11 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து நடந்த 1,500 மீட்டர் ஓட்டத்திலும் வெற்றி அவரது வசமாகியது.
இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் உற்சாகமடைந்த எட்வின், மாரத்தான் போட்டியிலும் பங்கேற்றார். ஆனால் நீண்டதூரம் ஓடிப் பழக்கம் இல்லாததால், அவரால் வெற்றி பெற முடியவில்லை.
தடகளப் போட்டிகள் மட்டுமின்றி, டென்னிஸ் போட்டியிலும் ஆஸ்திரேலியா சார்பாக அவர் போட்டியிட்டார். ஆனால் இதிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. பிற்காலத்தில் ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக மாறிய எட்வின் பிளாக், தனது 62-வது வயதில் காலமானார்.
----------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment