Powered By Blogger

Thursday, April 15, 2021

விளையாட்டாய் சில கதைகல் - ஜனவரி 31- பிப்ரவரி 3

 ஜனவரி 31

புஜாராவும் 2,657 பந்துகளும்
அதிரடியாக ஆடினால் மட்டுமே ரசிகர்களிடம் பெயர் வாங்க முடியும் என்ற நிலையை மாற்றி, அடக்கமாக தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டும் ரசிகர்களின் மனதை வெல்லலாம் என்று நிரூபித்துள்ளார் சேதேஷ்வர் புஜாரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா வெல்வதற்கு புஜாராவின் நிலையான தடுப்பாட்டமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தொடரில் புஜாராவை வீழ்த்த, அவருக்கு காயம் ஏற்படும் விதத்தில் பல பந்துகளை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வீசினர். ஆனால் புஜாரா எதற்கும் அசையவில்லை. மாறாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்தான் களைத்துப் போனார்கள்.

 இதைப் பயன்படுத்தி இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர்கள்  பேட்டை சுழற்ற,  வெற்றி இந்தியாவின் வசமானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் தொடர்களில் மட்டும் இவர் மொத்தம் 2,657 பந்துகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவராக வர்ணிக்கப்படும் ராகுல் திராவிட்டே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இத்தனை பந்துகளை எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஆடிய டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமனார் சேதேஷ்வர் புஜரா. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இவர் 4 ரன்களை மட்டுமே எடுத்தபோதிலும், 2-வது இன்னிங்ஸில் 72 ரன்களைச் சேர்த்தார். அவரது ஆட்ட முறை, ராகுல் திராவிட்டின் ஆட்ட முறையைப் போன்றே இருந்ததால், திராவிட் ஓய்வுபெற்ற பிறகு, அவரது தடுத்தாடும் பொறுப்பு புஜாராவுக்கு வழங்கப்பட்டது.
தனக்கு எது சரிப்பட்டு வரும், எது சரிப்பட்டு வரது என்பதை நன்றாக உணர்ந்துகொண்ட வீரர் புஜாரா. அதிரடியான ஆட்டம் தனக்கு வராது என்பதாலேயே ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை. அதற்கெல்லம் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் வெளுத்து வாங்கி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், அவரது போராட்டம் வெல்லட்டும்.
-------------------------------------------------------------------------------------
பிப்ரவரி  - 1
அறிமுக தொடரில் அசத்திய அசாருதீன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன், தனது 3-வது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 3-வது சதத்தை அடித்த நாள்  இன்று (பிப்ரவரி 1).  
இந்திய கிரிக்கெட்டில் கவாஸ்கர், வெங்சர்க்கர், மொகிந்தர் அமர்நாத் ஆகியோர் ஆதிக்கம் செலுத்திவந்த காலத்தில் 1984-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில்  அசாருதீன் அறிமுகமானார். இந்த காலகட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவந்தது. இத்தொடரில் அறிமுகமான அசாருதீன், தனது முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான தனது 3-வது டெஸ்ட் போட்டியிலும், பிப்ரவரி 1-ம் தேதி சதம் அடித்தார். கான்பூர் மைதானத்தில் அடித்த இந்த சதத்தின் மூலம்  முதல் 3 போட்டிகளிலும் சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இப்படி சாதனையுடன் இந்திய கிரிக்கெட்டுக்கு அறிமுகமான அசாருதீன், அதன் கேப்டனாகவும் நீண்ட நாள் நீடித்துள்ளார்.   1992, 1996 மற்றும் 1999-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியவர் என்ற பெருமையும் அசாருதீனுக்கு உண்டு. 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அசாருதீன் 6,215 ரன்களைக் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளைப் போல் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், 334 போட்டிகளில் 9,378 ரன்களைக் குவித்துள்ளார்.
கங்குலி மற்றும் தோனிக்கு முன்பு வெற்றிகரமான இந்திய கேப்டனாக விளங்கிய அசாருதீன்,  47 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்து 14 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். தனது 100-வது டெஸ்ட் போட்டியை ஆடத் தயாராக இருந்த நிலையில், சூதாட்டப் புகார் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆட அசாருதீனுக்கு தடை விதிக்கப்பட்டது. பிற்காலத்தில் அரசியலில் இணைந்த அசாருதீன், மொரதாபாத் தொகுதியில் இருந்து எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
------------------------------------------------------------------------------
பிப்ரவரி 2

மிக நீண்ட குத்துச்சண்டை போட்டி

மிக நீண்ட குத்துச்சண்டைப் போட்டி நடந்த நாள் இன்று  (பிப்ரவரி 2).
 
கற்காலத்தில் இருந்தே மனிதர்கள் ஆடிவந்த விளையாட்டுகளில் ஒன்று குத்துச்சண்டைப் போட்டி. ஆரம்ப காலகட்டங்களில், அதாவது கற்காலத்தில் குறிப்பிட்ட கால நேரத்துக்குள்  போட்டியை முடிக்க வேண்டும் என்ற விதிகளெல்லாம் கிடையாது. போட்டியில் ஏதாவது ஒரு வீரர் மயக்கமுற்று கீழே விழும்  வரை குத்துச்சண்டை போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. கிரேக்கர்களால் 3000 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், தங்கள் கைகளில் தோல்களால் ஆன கையுறைகளை அணிந்திருந்ததாக வரலாறு கூறுகிறது.
 
 அதன்பிறகு காலப்போக்கில்  சில விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 3 நிமிடங்கள் கொண்ட சுற்றுகளைக் கொண்டதாக குத்துச்சண்டை போட்டிகள் உருவாக்கப்பட்டன. இந்த சூழலிலும் குத்துச்சண்டை போட்டி எத்தனை நிமிடங்கள் அல்லது எத்தனை சுற்றுகள் நடைபெற வேண்டும் என்ற விதிகளெல்லாம் வகுக்கப்படவில்லை.

இந்த சூழலில்தான் 1892-ம் ஆண்டில் அமெரிக்காவில்  நகரில் ஹாரி ஷார்ப் மற்றும் பிராங்க் க்ரோஸ்பி ஆகிய 2 வீரர்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. மிக ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த குத்துச்சண்டை போட்டி நீண்ட நேரத்துக்கு முடிவில்லாமல் தொடர்ந்தது. 65 சுற்றுகளுக்கு பிறகு, இந்த போட்டியைக் கண்காணிந்து வந்த நடுவர்களுக்கே சோர்வு ஏற்பட்டு, அவர்கள் எழுந்து போனார்கள்.

ஆனால் நடுவர்கள் இல்லாமல் போட்டி மேலும் தொடர்ந்தது . இந்தச் சூழலில் 77-வது சுற்றில் பிராங் க்ரோஸ்பியின் தலையில் தாக்கி, அவரை நாக் அவுட் செய்தார் ஹாரி ஷார்ப். இதன் மூலம் இப்போட்டியில் அவர் வெற்றி பெற்றார். இதன் பிறகு பல போட்டிகள் நீண்டநேரம் நடைபெற்றாலும், முறையான விதிகள் வகுக்கப்பட்ட பிறகு, நீண்ட நேரம் நடைபெற்ற முதலாவது குத்துச்சண்டை போட்டி என்ற பெருமையை இந்த போட்டி பெற்றது.
-------------------------------------------------------------------
பிப்ரவரி 3
தடைகளைத் தாண்டிய டுட்டி சந்த்

இந்தியாவின் முன்னணி ஓட்ட வீராங்கனைகளில் ஒருவரான டுட்டி சந்த்தின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 3).

1996-ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூர் எனும் ஊரில், ஏழ்மையான  நெசவாளிகள் குடும்பத்தில் டுட்டி சந்த் பிறந்தார். அவரது பெற்றோருக்கு மொத்தம் 7 குழந்தைகள். இதில் டுட்டி சந்த் 3-வது குழந்தையாவார். டுட்டி சந்த்தின்  அக்கா சரஸ்வதி சந்த், உள்ளூரில் சிறந்த ஓட்ட வீராங்கனையாக இருந்தார். ஓட்ட வீராங்கனையாக இருந்ததால், அவருக்கு 2005-ம் ஆண்டில் ஒடிசா காவல் துறையில் வேலை கிடைத்தது. இதைப் பார்த்த டுட்டி சந்த், அக்காவைப் போல தனக்கு அரசு வேலை கிடைத்தால், குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்பதால்  சிறு வயது முதலே பயிற்சிகளில் ஈடுபட்டார்.

தேசிய அளவில் டுட்டி சந்த் புகழ்பெற்றது 2012-ம் ஆண்டில்தான். இந்த ஆண்டில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் தூரத்தை 11.8 விநாடிகளில் கடந்து டுட்டி சந்த் சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து பி.டி.உஷாவுக்கு அடுத்ததாக 100 மீட்டர் ஓட்டத்தில், இந்தியாவுக்கு சிறந்த வீராங்கனை கிடைத்ததாக பத்திரிகைகள் இவரைப் புகழ்ந்து எழுதின. இதைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டில் உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில் டுட்டி சந்த், இறுதிச் சுற்றை எட்டினார். இதன்மூலம் இப்போட்டியின் இறுதிச் சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
 இந்த சூழலில் அவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன்கள் அதிகம் இருப்பதாக கூறி, பெண்களுக்கான பிரிவில் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் விளையாட்டுக்கான கோர்ட்டில் அப்பீல் செய்து நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு, தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றார். 2018-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற அவர், தற்போது ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

No comments:

Post a Comment