மார்ச் 12
குண்டு எறியும் போட்டியின் கதை
குண்டு எறியும் போட்டியின் பிறப்பிடம் என்று கிரேக்க நாட்டைக் கூறலாம். பண்டைய காலத்தில் ராணுவ வீரர்களின் பலத்தைச் சோதிப்பதற்காக, இந்தப் போட்டியை கிரேக்க மன்னர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தங்கள் நாட்டில்தான் குண்டு எறியும் போட்டி தோன்றியது என்று ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் கூறி வருகின்றனர். இப்போட்டியில் ஆரம்ப காலகட்டத்தில் கனமான கற்களை ஒற்றைக் கையால் தூக்கி, நீண்ட தூரம் வீசும் வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
காலம் செல்லச் செல்ல, இந்த போட்டியின் வடிவம் மாறியது. கனமான கற்களுக்குப் பதிலாக இரும்பு குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 1896-ம் ஆண்டில் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், குண்டு எறியும் போட்டி சேர்க்கப்பட்டது. இதில் பங்கேற்கும் வீரர்கள் 2.135 மீட்டர் விட்டம் கொண்ட வட்டத்துக்குள் இருந்துகொண்டு, ஒற்றைக் கையால் 7.26 கிலோ இரும்பு உருண்டையை வீசவேண்டும்.
குண்டை வீசும்போது குறிப்பிட்ட வீரரோ, வீராங்கனையோ வட்டத்தைவிட்டு வெளியில் சென்றால், அது ஃபவுலாக அறிவிக்கப்படும். அவர் குண்டை எறிந்த தூரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. போட்டியில் அதிக தூரத்துக்கு இரும்பு குண்டை வீசும் நபர், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்ற விதி உருவாக்கப்பட்டது. இப்போட்டியில் பெண்கள் பயன்படுத்தும் குண்டுகளின் எடை 4 கிலோவாக உள்ளது.
1896-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான குண்டு எறியும் போட்டி அறிமுகப்படுதப்பட்டாலும், பெண்களுக்கான பிரிவில் 1948-ம் ஆண்டிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டது.
1990-ம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த போட்டி ஒன்றில், அந்நாட்டைச் சேர்ந்த ராண்டி பார்னஸ் என்ற வீரர் 23.12 மீட்டர் தூரத்துக்கு குண்டு வீசினார். இதுவே தற்போது உலக சாதனையாக உள்ளது. பெண்கள் பிரிவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடாலியா லிசோஸ்காயா என்பவர் 22.63 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்தது உலக சாதனையாக உள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
மார்ச் 13
நிறைவேறிய தந்தையின் கனவு
இந்திய கிரிக்கெட் அணியில் வேகமாக முன்னேறி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பிறந்தாள் இன்று (மார்ச் 13).
1994-ம் ஆண்டு, ஹைதராபாத்தில் உள்ள ஏழ்மையான குடும்பத்தில் முகமது சிராஜ் பிறந்தார். இவரது அப்பா முகமது கோஸ் ஒரு ஆட்டோ ஓட்டுநர். அம்மா ஷபானா பேகம் பல்வேறு வீடுகளில் வேலை பார்த்து சிராஜையும் அவரது சகோதரரையும் படிக்க வைத்துள்ளார். சிறுவயதில் படிப்பில் கவனம் செலுத்தாமல் கிரிக்கெட்டில் ஆர்வம்காட்டி வந்துள்ளார் முகமது சிராஜ். இதற்காக அவரது தாயார், பலமுறை சிராஜை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் அவரது தந்தை, சிராஜின் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவித்துள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், பயிற்சியாளரை நியமித்து பயிற்சி மேற்கொள்ள சிராஜால் முடியவில்லை. அதனால் தொலைக்காட்சிகளில் பல்வேறு போட்டிகளையும் பார்த்து சுயமாக பயிற்சி பெற்றுள்ளார். அரம்ப காலகட்டத்தில் வீட்டருகே நடந்த டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்த சிராஜை, அவரது நண்பர்கள்தான் தொழில்முறை கிரிக்கெட் வீரராகுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து சார்மினார் கிரிக்கெட் கிளப்பில் அவர் இணைந்துள்ளார். ஆரம்பத்தில் பேட்டிங்கில் கவனம் செலுத்திய முகமது சிராஜ், பின்னாளில் வேகப்பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
2015- 16-ம் ஆண்டில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டி, இந்திய அணிக்கு தேர்வு என்று வெகு வேகமாய் முன்னேறிய முகமது சிராஜ், ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கச் சென்றபோது அவரது அப்பா இறந்துவிட்டார். இருப்பினும் அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட வராமல் இந்தியாவுக்காக ஆடியுள்ளார் சிராஜ். இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் இந்தியாவுக்காக ஆடவேண்டும் என்பது என் தந்தையின் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவதுதான் நான் அவருக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலி” என்று கூறியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------
மார்ச் 14
அமெரிக்காவின் தங்க மங்கை
ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ரஷ்யா, ருமேனியா, சீனா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்திய காலம் இருந்தது. அதை முறியடித்து, அமெரிக்கர்களாலும் ஜிம்னாஸ்டிக்கில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த சைமன் பைல்ஸின் பிறந்தநாள் இன்று (மார்ச் 14).
1997-ம் ஆண்டு, அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சைமன் பைல்ஸ் பிறந்தார். சைமன் பைல்ஸின் தாயார் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். அதனால் சைமன் பைல்ஸையும் அவருடன் பிறந்த மற்ற 2 குழந்தைகளையும், ரான் என்ற அவரது தாத்தாதான் வளர்த்துள்ளார். அவர்கள்தான் சைமன் பைல்ஸை வளர்த்துள்ளனர். 6 வயது முதல் அவருக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சியையும் அளித்துள்ளனர்.
ஆரம்பத்தில் ஒரு சிறிய பயிற்சி மையத்தில்தான் பைல்ஸ் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த காலகட்டத்தில், அவரது திறமையைப் பார்த்து வியந்த, பிரபல ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரான அமீ போர்மான், அவருக்கு பயிற்சி அளிக்க முன்வந்தார். சைமன் பைல்ஸின் 8 வயது முதல் அமீ அவரது பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் விளையாட்டு வீராங்கனைகளிலேயே மிகவும் உயரம் குறைந்தவர் சைமன் பைல்ஸ். 2016-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 555 அமெரிக்க வீரர்களின் குழுவில், மிகவும் குள்ளமானவராக இருந்த சைமன் பைல்ஸின் உயரம் 4 அடி 9 அங்குலம். ஆனால் உயரத்துக்கும், விளையாட்டு ஆற்றலுக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 2016 ஒலிம்பிக்கில் புயலாய் சுழன்றடித்தார் சைமன் பைல்ஸ். இந்த ஒலிம்பிக்கில் மட்டும் 4 தங்கப்பதக்கங்கள் உட்பட மொத்தம் 5 பதக்கங்களை வென்றார். ஒலிம்பிக் பந்தயத்துடன் தனது வெற்றிப் பயணத்தை முடித்துக்கொள்ளாத சைமன் பைல்ஸ், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இதுவரை 19 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------
மார்ச் 15
பதக்கம் வென்ற மீனவப் பெண்
கெய்ரோ நகரில் கடந்த 5-ம் தேதி நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார் இந்தியாவின் மணிஷா கீர். இவர் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், 5 ஆண்டுகளுக்கு முன்புவரை சந்தையில் மீன் விற்றுக்கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலைச் சேர்ந்த மணிஷா கீரின் அப்பா கைலாஷ் கீர் ஒரு மீனவர். மணிஷாவையும் சேர்த்து அவருக்கு மொத்தம் 8 குழந்தைகள். மணிஷா 4-வது குழந்தை. குடும்பத்தில் ஒரு பக்கம் வறுமை இருந்தாலும், தனது குழந்தைகள் தன்னைப்போல் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்தார் கைலாஷ் கீர். இதற்காக அவர்களை படிக்க வைத்ததுடன் விளையாட்டுத் துறையிலும் ஈடுபட வைத்தார்.
மணிஷாவின் அண்ணன்கள் இருவர் வாலிபால் வீரர்களாகவும் ஒரு அக்கா படகுப் போட்டி வீராங்கனையாகவும் இருந்தனர். இந்தச் சூழலில் மணிஷாவுக்கு, துப்பாக்கி சுடும் வீராங்கனையாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதைப்பற்றி தனது சகோதரியிடம் சொல்ல, அவர் மணிஷாவை போபாலில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டிக்கான பயிற்சி முகாம் ஒன்றுக்கு 2013-ம் ஆண்டில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதல் முறையாக கிடைத்த வாய்ப்பிலேயே கிட்டத்தட்ட சரியாகச் சுட, அரசின் இளம் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பயிற்சி முகாமில் சேர்ந்த பிறகு, வாரந்தோறும் 42 மணிநேரம் பயிர்சி பெற்ற மணிஷா, பள்ளி நேரம் மற்றும் பயிற்சி நேரங்களைத் தவிர பிற சமயங்களில் அப்பாவுடன் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். மேலும் போபாலில் உள்ள சந்தையில் மீன் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார்.
2018-ம் ஆண்டில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற மணிஷா, இப்போது உலகக் கோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். போராடினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு மணிஷாவின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.
-------------------------------------------------------------------------------------------------------
மார்ச் 16
சச்சினின் 100-வது சதம்
கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம் (100 ரன்கள்) அடிப்பதே பெரிய விஷயம். ஆனால் அந்த சதத்திலேயே சதம் அடித்து சாதனை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் 100-வது சதத்தை அடித்த நாள் மார்ச் 16, 2012.
1989-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த சச்சின் டெண்டுல்கர், தனது முதல் சதத்தை எடுக்க ஓராண்டுக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது, 1990-ம் ஆண்டு, இங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அந்நாட்டுக்கு எதிராக தனது முதல் சதத்தை சச்சின் டெண்டுல்கர் படைத்தார். அதன்பிறகு, சச்சினின் பேட்டில் இருந்து ரன்கள் மழையாய் பொழிந்தன. கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்து சாதனை படைத்தவர் சச்சின்.
இப்படி தொடர்ச்சியாக 99 சதங்களை அடித்த பிறகு, 100-வது சதத்துக்காக அவர் பல மாதங்கள் காத்திருக்க வேண்டி வந்தது. 99-வது சதத்துக்கு பிறகு 33 இன்னிங்ஸ்களில் அவரால் தொடர்ச்சியாக சதம் அடிக்க முடியாமல் போனது. இந்த சமயத்தில்தான் 2012-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக மிர்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் தனது 100-வது சதத்தை பூர்த்தி செய்தார் சச்சின் டெண்டுல்கர்.
இந்த சதத்தைப் பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின், “நான் அடித்த சதங்களிலேயே மிகவும் கஷ்டமான சதமாக இது இருந்தது. பலமுறை சதத்தை நெருங்கிய பிறகு அவுட் ஆனேன். அதனால் எனக்கு அதிர்ஷ்டமில்லையோ என்றுகூட பலமுறை நினைத்தேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் பலரும் இதைப்பற்றியே கேட்டுக்கொண்டு இருந்தனர். கடும் போராட்டத்துக்கு பிறகு 100-வது சதத்தை அடித்துள்ளேன்” என்றார்.
No comments:
Post a Comment