மார்ச் 21
கிரிக்கெட்டுக்கு உதவிய பரதநாட்டியம்
சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 2-வது வீராங்கனை, ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என 2 சாதனைகளை சமீபத்தில் படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜ்.
சிறுவயதில் மிதாலி ராஜுக்கு பிடித்த விஷயங்களாக தூக்கமும் பரதநாட்டியமும் இருந்தது. 2-ம் வகுப்பில் படிக்கும்போதே பரதநாட்டிய வகுப்பில் சேர்ந்த மிதாலி ராஜ், கிரிக்கெட்டில் ஈடுபட காரணம் அவரது தூக்கம்தான். தினமும் காலையில் தாமதமாக எழும் மிதாலி ராஜை சுறுசுறுப்பாக அவரது அண்ணனுடன் கிரிக்கெட் பயிற்சி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அண்ணனுடன் அதிகாலையில் பைக்கில் செல்லும்போதே, அவர் தூங்கி வழிவாராம். இதைக் கவனித்த கிரிக்கெட் பயிற்சியாளரான ஜோதி பிரசாத், ஒரு நாள் மிதாலி ராஜை சுறுசுறுப்பாக்க, ஒரு பந்தைக் கொடுத்து எறியச் சொல்லியுள்ளார். அப்போது அவர் பந்தை எறிந்த விதம் ஒரு கிரிக்கெட் வீரரின் தரத்துக்கு இணையாக இருந்ததால் அவருக்கு பேட்டிங்கில் பயிற்சி கொடுத்துள்ளார்.
சில நாட்களிலேயே மிதாலி ராஜ் பேட்டிங் கற்க, பரதநாட்டியத்தை விட்டு கிரிக்கெட்டை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார் பயிற்சியாளர். இந்தியாவில் பெண்களுக்கான கிரிக்கெட் அவ்வளவாக புகழ்பெறாமல் இருந்த காலம் அது. இருப்பினும் பயிற்சியாளரின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, பரதத்தை கைவிட்டு கிரிக்கெட்டில் தீவிரமாக இறங்கியுள்ளார் மிதாலி. அன்று அவர் எடுத்த முடிவால்தான் இன்று உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக அவரை உயர்த்தியுள்ளது.
“கிரிக்கெட்டுக்காக பரதநாட்டியத்தை விட்டது வருத்தமாக இல்லையா” என்று செய்தியாளர்கள் ஒருமுறை அவரைக் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த மிதாலி ராஜ், “நான் பரதநாட்டியத்தை விட்டாலும் அது என்னை விடவில்லை. பரதநாட்டியத்தில் நான் கற்ற சில உடல்மொழிகள், பேட்டிங்கில் சில ஷாட்களை ஆட எனக்கு உதவியாக அமைந்துள்ளன” என்று கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------
மார்ச் 22
மாரத்தானாக நீண்ட பாட்மிண்டன் போட்டி
மிகக் குறைந்த நேரத்தில் முடியும் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று பாட்மிண்டன். அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் பாட்மிண்டன் போட்டிகளின் முடிவு நிச்சயிக்கப்படும். இந்த சூழலில் உலகின் மிக நீண்ட பாட்மிண்டன் போட்டியாக ஜப்பானின் குருமி யொனாவோ - நவோகோ ஃபுகுமான் ஜோடிக்கும் இந்தோனேஷியாவின் கிரேசியா போலி - நித்யா கிரிண்டா மஹேஸ்வரிக்கும் இடையே நடந்த பாட்மிண்டன் போட்டி விளங்குகிறது. 2016-ம் ஆண்டில் ஆசிய பாட்மிண்டன் சாபியன்ஷிப்பின் அரை இறுதிச் சுற்றில் இந்த ஜோடிகளுக்கு இடையே நடந்த போட்டியானது 2 மணி நேரம் 41 நிமிடங்களுக்கு நீடித்தது.
2016 ஒலிம்பிக் போட்டியில் இடம் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த குருமி யொனாவோ - நவோகோ ஃபுகுமான் ஜோடி, அதற்கான வழியாக ஆசிய பாட்மிண்டன் போட்டியை தேர்ந்தெடுத்தது. இப்போட்டித் தொடரின் ஆரம்பம் முதலே அட்டகாசமாக செயல்பட்ட இந்த ஜோடி, அனாயாசமாக அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இம்முறை அவர்களுக்கு வெற்றி அத்தனை எளிதாக இல்லை. 2015-ல் நடந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தோனேஷிய ஜோடி, ஜப்பானிய ஜோடிக்கு கடும் சவாலாக இருந்தது.
முதல் சுற்றை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் இந்தோனேஷிய ஜோடி வென்றது. ஆனால் மனம் தளராமல் போராடிய ஜப்பானிய ஜோடி, அடுத்த 2 சுற்றுகளையும் வென்றது. இதன்மூலம் 13-21, 21-19, 24-22 என்ற செட்கணக்கில் வெற்றியைக் கைப்பற்றியது.
ஆனால் இத்தனை கடுமையாக போராடி இறுதிச் சுற்றை எட்டிய குருமி யொனாவோ - நவோகோ ஃபுகுமான் ஜோடி இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. இதில் மற்றொரு ஜப்பானிய ஜோடியான மசுடோமோ - டகஹாஷி ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
----------------------------------------------------------------------------------------------
மார்ச் 23
உலகக் கோப்பையை தவறவிட்ட இந்தியா
2003-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிவரை முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று, கோப்பையை இழந்த நாள் மார்ச் 23.
1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, அதற்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இந்த சூழலில்தான் 2003-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சவுரவ் கங்குலி தலைமையில் சச்சின், திராவிட், சேவாக், யுவராஜ் சிங் என்று வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்திய அணி அனுப்பப்பட்டது.
இத்தொடரின் முதல் போட்டியில், கத்துக்குட்டிகளான நெதர்லாந்து அணியிடம் திக்கித் திணறி வென்றது இந்தியா. அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் அடுத்த 4 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் விஸ்வரூபம் எடுக்க ( அடுத்த 4 இன்னிங்ஸ்களில் 81, 152, 50, 98 ரன்களைக் குவித்தார்) சூப்பர் சிக்ஸ் சுற்று, அரையிறுதிச் சுற்று ஆகியவற்றில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா.
20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி, இறுதிச் சுற்றுக்குள் நுழைந்ததால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆட்டம் அந்த நம்பிக்கையைத் தகர்த்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, ரிக்கி பாண்டிங் (140 ரன்கள்), டெமின் மார்ட்டின் (88 ரன்கள்) ஆகியோரின் பேட்டிங்கால் 359 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் சேவக் மட்டும் ஓரளவுக்கு நன்றாக ஆடி 82 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால், 234 ரன்களில் சுருண்ட இந்தியா கோப்பையைத் தவற விட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------
மார்ச் 24
கரோனாவால் தள்ளிப்போன ஒலிம்பிக்ஸ்
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி தொடங்குவதாக இருந்த ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்த நாள் இன்று (மார்ச் 24).
2020-ல் கரோனாவின் கோரப் பிடியில் உலகம் சிக்கத் தொடங்கிய நிலையில் விளையாட்டு ரசிகர்கள் மனதில் இருந்த முக்கிய கேள்வி, ஒலிம்பிக் போட்டி நடக்குமா நடக்காதா என்பதுதான். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியை நடத்த, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மைதானங்களை அமைத்திருந்தது ஜப்பான். போட்டியை காண உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு வசதியாக அதிவேக ரயில்கள், தங்கும் விடுதிகள் போன்றவையும் வேகமாக தயாராகின. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு டோக்கியோவை தயார்படுத்த சுமார் 4 ஆண்டுகளுக்கு கடுமையாக உழைத்தது ஜப்பான். ஆனால் கரோனாவால் எல்லாம் தலைகீழானது.
கரோனா அச்சத்தால் தங்கள் நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா முதலில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து மேலும் சில நாடுகள் இதே நிலையைக் கடைபிடித்தது. இந்நிலையில் மார்ச் 24-ம் தேதி ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் அபே, “ஒலிம்பிக் போட்டிகளை எப்போது வேண்டுமானாலும் நடத்த நாம் தயாராகவே உள்ளோம். ஆனால் வீரர்களின் நலன், மற்ற நாடுகளின் கோரிக்கை ஆகியவற்றால் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைப்பது தவிர்க்க முடியாத விஷயமாகி வருகிறது” என்று கூறினார். இதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது.
வரும் ஜூலை மாதம் 21-ம் தேதி ஒலிம்பிக் போட்டியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் ஜப்பான் தற்போது ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் கரோனா அச்சம் விலகாததால், வெளிநாட்டுப் பார்வையாளர்களை இந்த ஒலிம்பிக் போட்டிக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment