பிப்ரவரி 8
சாதனை படைத்த கபில்தேவ்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 8. 1994-ம் ஆண்டில் இந்த நாளில்தான் இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளருமான கபில்தேவ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 432-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன்மூலம் 431 விக்கெட்களை எடுத்திருந்த ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை முறியடித்தார்.
ஒரு காலத்தில் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் இருந்து வருபவர்களும், பணக்காரர்களும்தான் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த சூழலில்தான் ஹரியாணாவின் சண்டிகர் நகரிலிருந்து வந்த ஏழை இளைஞரான கபில்தேவ் தோன்றினார். சாதாரண ஏழை இளைஞர்களாலும் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த கபில்தேவ், ஒரு கேப்டனாக 1983-ம் ஆண்டில், இந்தியாவின் பெரும் கனவாக கருதப்பட்ட உலகக் கோப்பையை கைப்பற்றினார். சிறந்த கேப்டனாக மட்டுமின்றி, சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நிரூபித்தார்.
இந்த சூழலில்தான் 1994-ம் ஆண்டு அகமதாபாத்தில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 432-வது விக்கெட்டாக ஹசன் திலகரத்னேவின் விக்கெட்டை சாய்த்தார் கபில்தேவ். இந்திய கிரிக்கெட்டின் தலைமகன் செய்த இந்த சாதனையை, நாடே கொண்டாடியது. கபில்தேவ் 432 விக்கெட்களை எடுத்ததைக் கொண்டாடும் விதமாக மைதனத்தில் இருந்து 432 பலூன்கள் பறக்க விடப்பட்டன. இந்திய கிரிக்கெட் வீரர்கள், அவரைத் தோளில் தூக்கிக்கொண்டு மைதானம் முழுக்க வலம்வந்தனர். தனது சாதனையை முறியடித்த கபில்தேவுக்கு, ரிச்சர்ட் ஹாட்லியும் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
இப்போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான வெங்கடபதி ராஜுவும், ராஜேஷ் சவுஹானும் சேர்ந்து 17 விக்கெட்களை வீழ்த்த, இந்திய அணி இலங்கையை வென்றது. அந்த காலகட்டத்தில் இந்திய அணி தொடர்ச்சியாகப் பெற்ற 9-வது வெற்றியாகும் இது.
--------------------------------------------------------------------------------------------
பிப்ரவரி 9
டேவிஸ் கோப்பை உதயமான நாள்
ஆண்கள் டென்னிஸ் போட்டியின் உலகக் கோப்பையாக கருதப்படும் டேவிஸ் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் இன்று (பிப்ரவரி 9).
1900-ம் ஆண்டுவரை டென்னிஸ் போட்டிகள், தனிநபர் போட்டியாக மட்டுமே இருந்தது. இந்த சூழலில் நாடுகளுக்கு இடையே அணிகளை உருவாக்கி, அவற்றை மோதவிட்டு ஒரு டென்னிஸ் தொடரை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் அமெரிக்க தேசிய லான் டென்னிஸ் அசோசியேஷனின் தலைவராக இருந்த ஜேம்ஸ் ட்விட்டுக்கு உருவானது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அணிகளுக்கு இடையிலான டென்னிஸ் தொடர் ஒன்றை அவர் ஏற்படுத்தினார்.
முதலில் சர்வதேச லான் டென்னிஸ் டிராபி என்ற பெயரில் இப்போட்டி தொடங்கப்பட்டது. இப்போட்டித் தொடரில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளிடையே 2 ஒற்றையர் போட்டிகள் மற்றும் ஒரு இரட்டையர் போட்டியைக் கொண்ட 3 ஆட்டங்கள் நடைபெற்றன. 3 போட்டிகளிலும் வெவ்வேறு வீரர்கள் இரு அணிகளுக்காகவும் விளையாடினர். பிற்காலத்தின் அமெரிக்க டென்னிஸ் வீரரான டுவைட் பில்லே டேவிஸ் என்பவரின் பெயரால், இப்போட்டி ‘டேவிஸ் கோப்பை டென்னிஸ்’ என்று அழைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமே பங்கேற்று வந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பின்னர் பல்வேறு நாடுகள் இணைந்தன. தற்போது 142 நாடுகள் இத்தொடரில் ஆடி வருகின்றன. அதுபோல் 3 போட்டிகளைக் கொண்டதாக இருந்த டேவிஸ் கோப்பை தொடரும், 5 போட்டிகளை (4 ஒற்றையர் மற்றும் 1 இரட்டையர் போட்டி) கொண்ட தொடராக மாறியது. 1921-ம் ஆண்டுமுதல், இந்திய டென்னிஸ் அணி, இத்தொடரில் ஆடி வருகிறது. இதில் 1966, 1974 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி இறுதிச் சுற்றுவரை முன்னேறியுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
பிப்ரவரி 10
விகாஸ் கிருஷ்ணனின் ஒலிம்பிக் கனவு
ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை வாங்கிக்கொடுத்த குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் யாதவின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 10).
1992-ம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஹிசார் என்ற ஊரில் விகாஸ் கிருஷ்ணன் பிறந்தார். அவரது அப்பா மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். 1994-ம் ஆண்டில் விகாஸ் கிருஷ்ணனின் அப்பா, பிவானி நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு பள்ளிப் படிப்பைத் தொடங்கிய விகாஸ் கிருஷ்ணன், தனது 10 வயதிலேயே பிவானியில் உள்ள குத்துச்சண்டை கிளப்பில் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கினார். பின்னாளில் புனே நகரில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் அவர் பயிற்சியைத் தொடங்கினார்.
ஆரம்ப காலகட்டத்தில் குத்துச்சண்டையில் தொடர்வதா அல்லது படிப்பைத் தொடர்வதா என்ற குழப்பம் விகாஸ் கிருஷ்ணனுக்கு இருந்தது. இந்நிலையில் 2012-ல் குத்துச்சண்டை களத்தில் இருந்து சிறிது காலம் விலகியிருந்த விகாஸ் கிருஷ்ணன், குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார். பின்னர் ஹரியாணா போலீசில் பணிக்குச் சேர்ந்த விகாஸ் கிருஷ்ணன், தற்போது டிஎஸ்பியாக உள்ளார்.
ஒரு புறம் காவல் துறையில் பணியாற்றினாலும், மறுபுறம் குத்துச்சண்டை களத்திலும் இறங்கி இந்தியாவுக்காக பல பதக்கங்களை அவர் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கால் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய விகாஸ் கிருஷ்ணன், துரதிருஷ்டவசமாக பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் அடுத்து வரவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக தீவிர பயிற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
“கடந்த முறை தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டதால், என்னால் பதக்கம் வெல்ல முடியவில்லை. இம்முறை தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு பதக்கம் வெல்வேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் விகாஸ் கிருஷ்ணன். இதற்காக வெளிநாடுகளில் பயிற்சியும் பெற்றுள்ளார். அவரது ஒலிம்பிக் கனவு நனவாக வாழ்த்துவோம்.
----------------------------------------------------------------------------
பிப்ரவரி 11
நிலாவில் விளையாட்டு
விளையாட்டுப் போட்டிகளை தரையில் நடத்தலாம். தண்ணீரில் நடத்தலாம். ஆனால் நிலவில் நடத்த முடியுமா?
முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் ஆலன் ஷெப்பர்ட், எட்கர் மிட்செல் ஆகிய விண்வெளி வீரர்கள். 1971-ம் ஆண்டில் அப்போலோ 14 என்ற விண்கலம் மூலம் நிலவுக்கு சென்ற இவர்கள் இருவருக்கும் நிலவில் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் ஆசை எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆலன் ஷெப்பர்ட், விண்வெளியில் கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து எட்கர் மிட்செல் ஈட்டியை எறிந்து விளையாடியுள்ளார். இதன்மூலம் நிலவில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்கள் என்ற புதிய சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.
நிலவில் விளையாடிய அனுபவத்தைப் பற்றி பின்னாளில் கருத்து தெரிவித்த மிட்செல், “நாங்கள் நிலவில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற நாளை, முதலாவது லூனார் ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கலாம்” என்று கூறியுள்ளார். அத்துடன் நிலவில் ஷெப்பர்ட் அடித்த பந்தைவிட, தான் வீசிய ஈட்டி 4 அங்குலம் முன்னால் போய் விழுந்ததாகவும் மிட்செல் கூறியுள்ளார். இந்த விளையாட்டின்போது ஷெப்பர்ட் அடித்த பந்தும், மிட்செல் வீசிய ஈட்டியும் இன்னும் நிலவு வெளியில் மிதந்துகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஷெப்பர்ட் பயன்படுத்திய கோல்ஃப் ஸ்டிக் மட்டும் இன்னும் நியூஜெர்ஸியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1998-ம் ஆண்டில் காலமான இந்த 2 விண்வெளி வீரர்களும் விண்வெளியில் விளையாட்டு வீரர்களாக மாறியதுடன், அங்கு அறிவியல் சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அத்துடன் 2 முறை நிலவு வெளியில் நடைபயிலவும் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment