Powered By Blogger

Thursday, April 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - பிப்ரவரி 24 - பிப்ரவரி 27

 பிப்ரவரி - 24


விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்
 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைக்க  வயது ஒரு தடையில்லை என்பதை சச்சின் டெண்டுல்கர் நிரூபித்த நாள் பிப்ரவரி 24. 2010-ம் ஆண்டில் இந்த நாளில்தான் அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து, இச்சாதனையை  படைத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றை எழுதினார்.  இச்சாதனையை படைத்தபோது சச்சினின் வயது 37.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே குவாலியர் நகரில் நடந்த ஒருநாள் போட்டியில்தான் இந்த சாதனையை படைத்தார் சச்சின் டெண்டுல்கர். இப்போட்டியில்  பார்னல் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி, தான் ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸுக்கு தயாராக இருப்பதை உணர்த்தினார் சச்சின்.
முதல் 90 பந்துகளில் சதத்தை விளாசிய சச்சின், அதன் பிறகு ஆட்டத்தை டாப் கியருக்கு மாற்றினார், தன்னை நோக்கி வீசப்படும் பந்துகளை மைதானத்தின் எல்லைக்கு விரட்டுவதிலேயே குறியாக இருந்தார். அடுத்த 57 பந்துகளில், அதாவது 147 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார். இந்த இரட்டை சதத்தின்போது 25 பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் அவர் விளாசினார்.
கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் எடுத்த விஸ்வரூபத்தால், அன்றைய தினம் இந்திய அணி 50 ஓவர்களில்  401 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி,  டிவில்லியர்ஸ் (114 ரன்கள்) சதம் அடித்தபோதிலும் 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 153 ரன்களில் அபார வெற்றியை ருசித்தது.
அன்றைய போட்டிக்கு பின்னர் தனது  இரட்டை சதத்தைப் பற்றி கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், “கடந்த 20 ஆண்டுகளாக என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு இந்த இரட்டை சதத்தை காணிக்கையாக்குகிறேன்” என்றார்
----------------------------------------------------------------------------------------------------------------------------------


பிப்ரவரி 25
விடைபெற்ற  கிரிக்கெட் முன்னோடி
கிரிக்கெட் உலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தை எட்டி, எக்காலத்துக்கும் சிறந்த பேட்ஸ்மேன் என பெயர் பெற்றவரான டான் பிராட்மேன் காலமான தினம் இன்று (பிப்ரவரி 25). 2001-ம் ஆண்டில் காலமான அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
டான் பிராட்மேனுக்கு குடிப்பழக்கம் கிடையாது. மற்றவர்கள் குடிப்பதையும் விரும்ப மாட்டார்.   ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு அக்காலத்தில் செல்வந்தர்கள் பணத்தை பரிசாக வழங்குவார்கள். பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பரிசு வாங்கும் வீரர், தன் சகாக்களுக்கு மது வாங்கிக் கொடுப்பார். ஆனால் பிராட்மேன்,  யாருக்கும் மது வாங்கிக் கொடுத்ததில்லை.
52 டெஸ்ட் போட்டிகளில் 80 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்துள்ள பிராட்மேன்,  29 சதங்களை விளாசியுள்ளார்.  இதன்படி மூன்றில் ஒரு இன்னிங்ஸில் அவர் சதம் விளாசியுள்ளார். மொத்தம் 6,996 ரன்களைக் குவித்துள்ள டான் பிராட்மேனின் சராசரி ரன்கள் 99.94.
1936-ம் ஆண்டில் வெளியான ‘தி பிளையிங் டாக்டர்’ என்ற திரைப்படத்தில் டான் பிராட்மேன் நடித்துள்ளார்.
கிரிக்கெட் வீரராக இருந்த நிலையில் 1933-ம் ஆண்டில் நடுவர்களுக்கான (அம்பயர்)  தேர்விலும் பிராட்மேன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் ஒரு போட்டியில்கூட அவர் நடுவராக இருந்ததில்லை.
இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் மீது டான் பிராட்மேன் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். தனது 90-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சச்சின் டெண்டுல்கரை மட்டுமே அவர் அழைத்திருந்தார்.
ஒரு நல்ல இசைக் கலைஞராகவும் டான் பிராட்மேன் இருந்துள்ளார். பியானோ இசைக் கலைஞரான பிராட்மேன், ‘எவரிடே ஈஸ் எ ரெயின்போ டே ஃபார் மீ’ (Everyday is a Rainbow Day for Me) என்ற பாடலை இசையமைத்து பாடியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பிப்ரவரி 26
குருவின் பாதையில் நடைபோடும் சீடன்
ஆசிய மற்றும் காமன்வெல்த்  போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றுகொடுத்த மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 26).
ஹரியாணாவில் உள்ள குந்தன் கிராமத்தின் ஏழ்மையான குடும்பத்தில் 1994-ம் ஆண்டில் பிறந்தவர் பஜ்ரங் பூனியா. அவரது ஊரில் மல்யுத்த வீரர்கள் பலர் உருவாகி சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர். அவர்களின் வரிசையில் தன் மகன்களான பஜ்ரங் பூனியாவையும், ஹரீந்தரையும்  சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் பஜ்ரங்கின் தந்தையான பல்வான் சிங் பூனியா.  
பஜ்ரங்குக்கு 7 வயது இருக்கும்போதே அவரது அண்ணன் ஹரீந்தருடன்  உள்ளூரில் மல்யுத்த பயிற்சி அளிக்கும் அகாடாக்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பல்வான் சிங். மல்யுத்தத்தைவிட இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வாழும் வசதியான வாழ்க்கை பஜ்ரங்கை கவர்ந்துள்ளது. இதனால் சிறுவயதிலேயே அவருக்கு மல்யுத்தத்தின் மீது காதல் பிறந்துள்ளது.
அகடாக்களில் அடிக்கடி மல்யுத்த போட்டிகள் நடக்கும். இதில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்ததால், டெல்லியில் உள்ள சத்ராசால் மையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு பஜ்ரங் பூனியாவுக்கு கிடைத்துள்ளது.   அங்கிருந்த மூத்த வீரரான யோகேஸ்வர் தத்துக்கு அவரை மிகவும் பிடித்துவிட, தன் தம்பியைப் போலவே அவர் மீது பாசம் காட்டத் தொடங்கினார். பிற்காலத்தில் யோகேஸ்வர் தத்தையே தனது முக்கிய பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துக்கொண்டார் பஜ்ரங்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான யோகேஸ்வர் தத், மல்யுத்தத்தில் பல நுணுக்கங்களை பஜ்ரங்குக்கு கற்றுக்கொடுத்தார்.  அதைப் பயன்படுத்தி   ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு என பல்வேறு சர்வதேச போட்டிகளில் அவர் பதக்கங்களைக் குவித்துள்ளார். தன் குருநாதரைப் போலவே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவுடன் தற்போது பயிற்சி பெற்று வருகிறார் பஜ்ரங் பூனியா.
-----------------------------------------------------------------------------------------------------


பிப்ரவரி 27

உசேன் போல்ட்டின் அடுத்த லட்சியம்
 
உசேன் போல்ட்டைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜமைக்காவைச் சேர்ந்த இவர், ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் 8 முறை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். ஓட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சில காலம் கால்பந்து விளையாட்டில் இவர் ஆர்வம் செலுத்தினார். ஆஸ்திரேலியாவில் ‘சென்ட்ரல் கோஸ்ட் மரைன்ஸ்’ என்ற அணிக்காக சில போட்டிகளில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து சில காலம் கிரிக்கெட்டில்  ஆர்வம் செலுத்திவந்த இவர், 2019-ம் ஆண்டில் அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு இசைத்துறையில் கால் பதித்துள்ளார்.
 
நஜென்ட் என்.ஜே.வாக்கர் என்ற தன் நண்பருடன் இணைந்து,  ‘லிவிங் தி ட்ரீம்’ என்ற பாடலை வெளியிட்டுள்ள உசேன் போல்ட், இப்போது இத்துறையில் உலக அளவில் நம்பர் ஒன் ஆகும் லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்.  
வானொலி ஒன்றுக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “தடகளத்தைப் போலவே இசையையும் நான் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளேன்.  கரோனா காலத்தின்போது ஒரு சிறந்த ஆல்பத்தை உருவாக்குவது பற்றி நண்பர்களுடன் ஆலோசித்து திட்டங்களை தீட்டியுள்ளேன். ஜமைக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெறும் வகையில் ஒரு இசை ஆல்பத்தை உருவாக்குவேன்” என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில் விளையாட்டு உலகில் இருந்து ஓய்வுபெற்றாலும் அதை முற்றிலும் விட முடியாமல் இருக்கிறார் உசேன் போல்ட். சமீபத்தில் நண்பர்கள் சிலருடன் இணைந்து இவர் கிரிக்கெட் ஆடியது, சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதில் கிறிஸ் கெயிலைப் போலவே சில ஷாட்களை ஆடி அசத்தியுள்ளார் உசேன் போல்ட்.

No comments:

Post a Comment